சென்னை வெளிவட்டச் சாலை திட்டத்துக்காக நிலம் கையகப்படுத்த பிறப்பித்த உத்தரவு செல்லும் என, சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னையில் 60 கிலோ மீட்டர் தூரத்துக்கான வெளிவட்டச் சாலை அமைக்க 2012-ம் ஆண்டு திட்டம் தீட்டப்பட்டது. இரண்டு கட்டங்களாக நிறைவேற்ற முடிவு செய்யப்பட்ட இத்திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக வண்டலூரில் இருந்து, நெமிலிச்சேரி வரை 29.65 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலை அமைப்பதற்காக நிலங்கள் கையகப்படுத்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இந்த அறிவிப்பை ரத்து செய்யக் கோரி, நில உரிமையாளர்கள் ஆனந்த் கங்கா உள்ளிட்ட பலர் வழக்குத் தொடர்ந்தனர். அவர்கள் தங்கள் மனுக்களில், நெடுஞ்சாலை சட்டப்படி உரிய நடைமுறைகளைப் பின்பற்றாமல் நிலம் கையகப்படுத்தப்படுவதாகக் குற்றம் சாட்டியிருந்தனர். ஆனால், சட்டத்தின்படி உரிய நடைமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அரசுத் தரப்பின் இந்த வாதத்தை ஏற்ற நீதிபதி இளந்திரையன், இன்று (செப்.18) நிலம் கையகப்படுத்துவதற்கு உரிய அனைத்து நடைமுறைகளையும் அரசு பின்பற்றியுள்ளதாகக் கூறி, வழக்குகளைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.