புதுக்கோட்டையில் புதிய தமிழகம் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது, செய்தியாளர்களிடம் அக்கட்சியின் தலைவர் கே.கிருஷ்ணசாமி கூறியதாவது:
வரவிருக்கும் தேர்தலில் கட்சியின் நிலைப்பாடு குறித்து, சென்னையில் நடைபெற உள்ள கட்சியின் உயர்நிலைக் கூட்டத்தில் விவாதித்து முடிவெடுக்கப்படும்.
2011-ல் புதிய தமிழகம் அதிமுகவோடு கூட்டணி வைத்ததால்தான், அதிமுகவுக்கு திருப்புமுனை ஏற்பட்டது. நாங்கள் வைத்த எந்தக் கோரிக்கையையும் அதிமுக அரசு நிறைவேற்றவில்லை. தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளில் 100 கவுரவக் கொலைகள் நடந்த போதிலும், அப்படி ஒன்றும் நடக்கவில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது. மத்தியில் கூட்டணி ஆட்சி அமையும்போது ஏன் மாநிலத்தில் அமையக் கூடாது. அப்படியொரு நிலை தமிழகத்தில் ஏற்பட்டால், அதை நான் வரவேற்பேன். ஆனால், தற்போது அதை வலியுறுத்தவில்லை என்றார்.