தாய்மொழியுடன் இந்தியையும் பயன்படுத்தக் கட்டாயப்படுத்துவது மறைமுகமாக இந்தியைத் திணிக்கும் செயல் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சித்துள்ளார்.
இந்திய அரசியல் நிர்ணய சபை, தேவநாகரி எழுத்து வடிவத்தில் எழுதப்படும் இந்தி மொழியை இந்தியாவின் அலுவல் மொழியாக, கடந்த 1949ஆம் ஆண்டு செப்டம்பர் 14ஆம் நாள் தேர்வு செய்தது. இந்த நாள் ஆண்டுதோறும் இந்தி தினமாகக் கொண்டாடப்படுகிறது.
இந்தி தினத்தையொட்டி பல்வேறு தலைவர்களும் இன்று வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்தி தினத்தையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டார்.
அவர் நிகழ்ச்சியில் பேசும்போது, ''இந்தி தினமான இன்று நாட்டு மக்கள் அனைவரும் அலுவல் மொழியான இந்தியையும் தங்கள் தாய்மொழியுடன் சேர்த்து படிப்படியாகப் பயன்படுத்துவதற்கான உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். இது மிக முக்கியமான ஒன்றாகும். தாய்மொழியுடன் அலுவல் மொழியையும் சேர்த்துப் பயன்படுத்துவதில்தான் இந்தியாவின் முன்னேற்றம் அடங்கியுள்ளது'' என்று கூறியிருந்தார்.
அமைச்சர் அமித் ஷாவின் கருத்தை பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவுகளில், ''இந்தியர்கள் அனைவரும் அலுவல் மொழியான இந்தியுடன் தாய்மொழியையும் இணைத்துப் பயன்படுத்துவதில்தான் நாட்டின் முன்னேற்றம் அடங்கியிருக்கிறது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியிருக்கிறார். இது மறைமுகமாக இந்தியைத் திணிக்கும் செயலாகும்!
இந்தி திவாஸ் நாளில் இந்தி மொழிப் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் பேசுவது தவறில்லை. ஆனால், இந்தியைப் பயன்படுத்தினால்தான் நாடு முன்னேறும் என்று கூறுவதில் ஏராளமான பொருள்கள் மறைந்து கிடக்கின்றன. அது தவறு... அவ்வாறு கூறக்கூடாது!
தமிழ் உள்ளிட்ட எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளையும் அலுவல் மொழியாக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாகக் கிடப்பில் கிடக்கிறது. அந்தக் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றி மொழிச் சமநிலையை மத்திய அரசு ஏற்படுத்த வேண்டும்'' என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.