நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டில் மாணவன் புகைப்படம் இடம் பெற்றதால் குழப்பத்தில் தவித்த மாணவி, உயர் நீதிமன்ற மதுரை கிளை நள்ளிரவில் பிறப்பித்த உத்தரவால் தேர்வு எழுதினார்.
மதுரை செனாய் நகரைச் சேர்ந்தவர் எஸ்.வெங்கடேசன். சரக்கு வாகன ஓட்டுநராகப் பணிபுரிகிறார். இவரது மகள் சண்முகப்பிரியா. இவர் 2020-21 கல்வியாண்டில் பிளஸ் 2 பொதுத் தேர்வில் 91.54 சதவீத மதிப்பெண் பெற்றார்.
இவர் கடந்த 2 ஆண்டுகளாக நீட் தேர்வுக்குத் தயாராகி வந்தார். 2021 நீட் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பித்தார். நேற்று நடைபெற்ற தேர்வு எழுதுவதற்கான நுழைவுச் சீட்டை (அட்மிட் கார்டு) நேற்று முன்தினம் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்தார். அதில் அவரது புகைப்படத்துக்குப் பதில் அலெக்ஸ்பாண்டியன் என்ற மாண வனின் புகைப்படமும், அந்த மாணவனின் கையெழுத்தும் இடம் பெற்றிருந்தது. இதைப் பார்த்து சண்முகப்பிரியா அதிர்ச்சி யடைந்தார். தேசிய தேர்வு முகமைக்கு மின்னஞ்சல் வழியாகப் புகார் அனுப்பினார்.
தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டார். நடவடிக்கை எடுக்காததால் வழக்கறிஞர் எம்.சரவணன் மூலம் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு அவசர மனு தாக்கல் செய்தார்.
இதை நிர்வாக நீதிபதி எம்.துரைசாமி உத்தரவின்பேரில் நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் இரவு 9.15 மணிக்கு விசாரிக்கத் தொடங் கினார். அதிகாலை 12.15 மணிக்கு விசா ரணை முடிந்தது.
இறுதியில் மாணவி சண்முகப் பிரியாவை மதுரை வீரபாஞ்சன் சோலைமலை பொறியியல் கல்லூரி நீட் தேர்வு மையத்தில் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவு நகல் அதிகாலை 1.30 மணியளவில் மனுதாரர் தரப்புக்கு வழங்கப்பட்டது. உயர் நீதிமன்ற உத்தரவையடுத்து மாணவி சண்முகப்பிரியா நேற்று நீட் தேர்வு எழுதினார்.