தமிழகம்

வைகைக் கரையில் சங்கப்பூங்கா அமைக்கப்படும்: மதுரை எம்.பி. தகவல்

செய்திப்பிரிவு

வைகைக் கரையில் சங்கப் பூங்கா அமைக்கப்படும் என மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வைகைக் கரையோரம் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகள் குறித்து செல்லூர், ஆழ்வார்புரம், ராமராயர் மண்டபம் ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டோம்.

இவற்றில் இரண்டு இடங்களில் மதுரை குறித்த சங்கப் பாடல்களைக் காட்சிப்படுத்தும் வகையில் சங்கப் பூங்காக்கள் அமைப்பதற்கான திட்டமும், இரண்டு இடங்களில் இளைஞர்களுக்கான திறந்தவெளி உடற்பயிற்சிக் கூடம் அமைப்பதற்கான திட்டமும் மேற்கொள்வதற்கான சாத்தியப்பாடுகளை ஆய்வு செய்தோம்.

தொடர்ச்சியாக வருகின்ற செப்டம்பர் 17-ம் தேதி நடைபெற உள்ள ஸ்மார்ட் சிட்டி ஆலோசனைக் குழு கூட்டத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெறும் அனைத்துப் பணிகள் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.

இந்த ஆய்வின்போது மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் இரா.விஜயராஜன் உள்ளிட்டோர் பங்கெடுத்தனர்.

SCROLL FOR NEXT