புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே பாண்டிக்குடியில் 15 ஏக்கரில் உள்ள பனந்தோப்பு பனைப் பூங்காவாக மேம்படுத்தப்படும் என அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே பாண்டிக்குடி கிராமத்தில் அரசு இடம் 15 ஏக்கரில் 37 ஆண்டுகளாகப் பராமரிக்கப்பட்டு வரும் 10 ஆயிரம் பனை மரங்களைப் பார்வையிட்டதோடு, அவற்றைப் பாதுகாத்து வரும் பொதுமக்களை இன்று (செப்.11) பாராட்டிய பிறகு, மாநில சுற்றுச்சூழல்- காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
’’தமிழகத்தின் மாநில மரமான பனையைப் பாதுகாப்பதற்கு நிகழாண்டில் 70 லட்சம் பனை விதைகளை விதைக்கவும், பனை மரங்களை வெட்டுவதற்கு அரசிடம் அனுமதி பெற வேண்டும் எனவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
பனைமரம் மட்டும்தான் ஹைபிரிட் செய்யப்படாத மரமாக இருக்கிறது. எனவே, சுற்றுச்சூழல் துறையின் சார்பில் ரூ.50 கோடியில் மரக்கன்றுகள் நடும் திட்டத்தில் பனை மரத்துக்கு முன்னுரிமை அளிக்கப்படும். பாண்டிக்குடியில் உள்ள பனந்தோப்பில் இருந்து ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட விதைகளைச் சேகரித்து ஆலங்குடி தொகுதி முழுக்க நடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த பனந்தோப்பு பனைப் பூங்காவாக மாற்றப்படும். மேலும், பொதுமக்கள் பார்வையிடுவதற்கு வசதியாக ரூ.7 லட்சத்தில் சாலை உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்படும். மேலும், பனையிலிருந்து பனங்கற்கண்டு உள்ளிட்ட மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களைத் தயாரிப்பதற்கான நவீன தொழில்நுட்ப வசதிகள் ஏற்படுத்தப்படுவதோடு, அதைத் தயாரிப்பதற்கான பயிற்சியும் இப்பகுதி மக்களுக்கு அளிக்கப்படும்.
இதுபோன்று, பனை மரங்களைப் பாதுகாத்து வருவோருக்குத் தமிழக அரசின் சார்பில் விருது அளிப்பதற்காக முதல்வர் மூலமாக நடவடிக்கை எடுக்கப்படும்’’.
இவ்வாறு அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்தார். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் பெ.வே.சரவணன், அறந்தாங்கி கோட்டாட்சியர் சொர்ணராஜ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.