சென்னையில் அனைத்துக் கட்சி பிரதிநிதிகளுடன் மத்திய தேர்தல் ஆணையர்கள் வரும் 10-ம் தேதி ஆலோசனை நடத்துகின்றனர்.
தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய 5 மாநில சட்டப்பேரவைக்கான பொதுத்தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக, இந்திய தலைமை தேர்தல் ஆணையர் நசீம் ஜைதி, ஆணையர்கள் ஏ.கே.ஜோதி, ஓம் பிரகாஷ் ராவத் ஆகியோர் அந்த மாநிலங்களில் ஆய்வு செய்து வருகின்றனர். இவர்கள் வரும் 9-ம் தேதி புதுச்சேரி செல்கின்றனர். 10-ம் தேதி தமிழகம் வருகின்றனர். இதுதொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறியதாவது:
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் ஆணையர்கள் சென்னையில் 10-ம் தேதி மாலை 6 முதல் 7 மணி வரை அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை தனித்தனியாக சந்திக்கின்றனர். 11-ம் தேதி காலை மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட காவல் கண் காணிப்பாளர்களுடன் ஆலோ சனை நடத்துகின்றனர். மாலையில் தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர், டிஜிபி, வருமானவரித் துறை ஆணையர், மத்திய கலால் வரித் துறை ஆணையருடன் ஆலோசனை நடத்திவிட்டு அன்று இரவு டெல்லி திரும்புகின்றனர்.
இரட்டைப் பதிவு
2009-ம் ஆண்டு முதல் இறந்தவர்களின் பெயரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கும் பணி நடந்து வருகிறது. இரட்டைப் பதிவுகளும் ஆய்வு செய்யப்படுகின்றன. ஏற்கெனவே, நீக்கம் தொடர்பாக ஆன்லைனில் 1,200 மனுக்களும், கடந்த 31-ம் தேதி சிறப்பு முகாமில் 17 ஆயிரம் மனுக்களும் வந்துள்ளன. இரட் டைப் பதிவுகள் அதிகரிப்பதை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட் டுள்ளது. 6-ம் தேதி (நாளை) நடக்கும் சிறப்பு முகாமில், 20 வய துக்கு மேல் உள்ள வாக்காளர்கள் பெயர் சேர்க்க மனு அளித்தால், ஏற்கெனவே உள்ள வாக்காளர் அடையாள அட்டை எண், வசித்த முகவரிக்கான ஆதாரத்தையும் அளிக்க வேண்டும்.
எளிய நடைமுறை
முகவரி மாற்றம் தொடர்பாக ஆன்லைனில் எளிமையாக விண்ணப்பிக்கவும், பழைய முகவரியில் நீக்கம் செய்யவும் எளிமையான நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. 1950 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பியும் நீக்கம் செய்யலாம்.
தமிழக பொதுத்தேர்தலுக்கு தேவையான 75 ஆயிரம் மின்னணு இயந்திரங்களில் 45 ஆயிரம் இயந்திரங்கள் தற்போது வந்துள்ளன. இவற்றை பெல் நிறுவன அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.