தமிழகம்

கார் மீது லாரி கவிழ்ந்து பெண் மருத்துவர் உயிரிழப்பு: சிவகங்கை அருகே 3 மணி நேர போராட்டத்துக்கு பின் உடல் மீட்பு

செய்திப்பிரிவு

சிவகங்கை அருகே கார் மீது லாரி கவிழ்ந்ததில் பெண் மருத்துவர் உயிரிழந்தார். காருக்குள் சிக்கிய அவரது உடலை தீயணைப்புத் துறையினர் 3 மணி நேரம் போராடி மீட்டனர்.

மதுரை அண்ணா நகரைச் சேர்ந்த ஆதப்பன் மனைவி இந்திரா (68). தனியார் மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். சில ஆண்டுகளுக்கு முன் மருத்துவரான இவரது கணவர் ஆதப்பன் விபத்தில் இறந்தார். இவர்களது மகன் கணேசன், மகள் நாகலட்சுமி வெளிநாட்டில் மருத்துவர்களாக உள்ளனர்.

இந்நிலையில், மதுரையில் தனியாக வசித்து வந்த இந்திரா, நேற்று காலை சிவகங்கை அருகே காளையார்மங்கலத்தில் நடந்த உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சிக்கு வந்துவிட்டு காரை அவரே ஓட்டிக்கொண்டு ஊருக்குப் புறப்பட்டார். ஒக்கூரில் நாட்டரசன்கோட்டை சாலையில் இருந்து சிவகங்கை சாலைக்கு திரும்பினார்.

அப்போது மதகுபட்டி பகுதியில் இருந்து ஜல்லி ஏற்றி வந்த லாரி கார் மீது மோதாமல் இருக்க அதன் ஓட்டுநர் பிரேக் பிடித்தார்.

ஆனால், கார் மீது லாரி கவிழ்ந்தது. காரில் இருந்த இந்திரா உயிரிழந்தார். பொதுமக்கள் உதவியோடு தீயணைப்புத்துறையினர் ஜேசிபி இயந்திரம் மூலம் 3 மணி நேரம் போராடி இந்திரா உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர்.

மதகுபட்டி போலீஸார் வழக்குப் பதிந்து லாரி ஓட்டுநர் அஜித்திடம் விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT