கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு தொடர்பாக உதகையில் மேற்கு மண்டல ஐஜி சுதாகர் தலைமையில் 3 மணி நேரம் ஆலோசனை நடந்தது.
நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24-ம் தேதி கொள்ளை முயற்சி நடந்தது. இதில், காவலாளி ஓம் பகதூர் (50) கொலை செய்யப்பட்டார். இந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் சயான், வாளையாறு மனோஜ், சந்தோஷ் சாமி, தீபு, சதீசன், உதயகுமார், ஜிஜின் ஜாய், ஜம்சீர் அலி, மனோஜ் சாமி மற்றும் குட்டி என்கிற பிஜின் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், இந்த வழக்குக்கு அரசு சார்பில் பிரத்யேகமாக ஷாஜகான் மற்றும் கனகராஜ் ஆகிய இரு வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டனர். மேலும் போலீஸார் சயான், உயிரிழந்த கனகராஜின் சகோதரர் தனபால் ஆகியோரிடம் மறு விசாரணையைத் தொடங்கினர்.
அரசு வழக்கறிஞர்கள், வழக்கை முழுமையாக விசாரிக்க வேண்டும். எனவே, விசாரணைக்குக் கூடுதல் அவகாசம் வேண்டும் எனத் தொடர்ந்து கோரி வந்த நிலையில், வழக்கு விசாரணை 4 வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வழக்கில் சேர்க்கப்பட்ட சாட்சிகளை விசாரிக்க போலீஸார் தீவிரம் காட்டி வருகின்றனர். கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன், ஷாஜி ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
ஐஜி ஆலோசனை
இந்நிலையில், இன்று சாட்சிகள் யாரிடமும் விசாரணை நடத்தப்படவில்லை. ஐஜி சுதாகர் மற்றும் டிஐஜி முத்துசாமி உதகை வந்தனர். இவர்கள் தங்கள் வாகனங்களை மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் விட்டு விட்டு, ஆய்வாளர் வாகனத்தில் சீருடை இல்லாமல் பழைய எஸ்பி அலுவலகத்துக்கு வந்தனர்.
உதகை பழைய எஸ்பி அலுவலகத்தில் ஐஜி சுகாதர் தலைமையில் ஆலோசனை நடந்தது. இதனால், அலுவலகம் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
ஆலோசனைக் கூட்டத்தில் டிஐஜி முத்துசாமி, மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் ஆஷிஸ் ராவத், கூடுதல் எஸ்பி கிருஷ்ணமூர்த்தி, ஆய்வாளர் வேல்முருகன் ஆகியோர் பங்கேற்றனர். கூட்டம் மாலை 4 மணி வரை நடந்தது.
இதுகுறித்து போலீஸார் கூறும்போது, ''சயான், தனபாலிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணை அறிக்கை, கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன், ஷாஜி ஆகியோரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணை, விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்வது மற்றும் நேரடி சாட்சியான கிருஷ்ணதாபாவை நேபாளத்திலிருந்து வரவழைத்து விசாரிப்பது ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டது'' என்று தெரிவித்தனர்.
தனிப்படை கேரளா விரைவு
இந்நிலையில், விபத்தில் உயிரிழந்த சயானின் மனைவி மற்றும் குழந்தைகளின் மரணம் குறித்து அவர்களின் உறவினர்களிடம் விசாரிக்கத் தனிப்படை, சயானின் சொந்த ஊரான கேரள மாநிலத்துக்குச் சென்றுள்ளது.