போலியாக வழக்குப் பதிவு செய்த வழக்கில் ஓய்வு பெற்ற சிறப்பு சார்பு ஆய்வாளரைக் கைது செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தஞ்சை மாவட்டம் வீர ராகவபுரத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற சிறப்பு சார்பு ஆய்வாளர் தமிழரசன், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:
பொய்ப் புகாரின் பேரில் புகார்தாரரின் கையெழுத்தைப் போலியாகப் போட்டு 2017-ல் வழக்குப் பதிவு செய்ததாக என் மீது பேராவூரணி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். அந்த சம்பவத்துக்கும் எனக்கும் தொடர்பு இல்லை. எனக்கு இதய நோய் உள்ளது. இதனால் எனக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதி பி.புகழேந்தி விசாரித்தார்.
பின்னர், ’’மனுதாரருக்கு முன்ஜாமீன் வழங்க முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. போலீஸார் உடனடியாக மனுதாரரைக் கைது செய்ய வேண்டும். அவர் மீது எத்தனை வழக்குகள் உள்ளது என்பது குறித்து போலீஸார் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’’ என உத்தரவிட்டு, விசாரணையை செப்.9-ம் தேதிக்குத் தள்ளி வைத்தார்.