பேக் டெய்லரிடம் ரூ.10 லட்சம் பறித்த வழக்கில் காவல் ஆய்வாளர் வசந்தி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் வழக்கின் தற்போதைய நிலையைத் தெரிவிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடியைச் சேர்ந்த பேக் டெய்லரிடம் ரூ.10 லட்சம் பறித்த வழக்கில் மதுரை, நாகமலை புதுக்கோட்டை காவல் ஆய்வாளர் வசந்தி கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த வழக்கில் வசந்தி கைது செய்யப்படுவதற்கு முன்பு முன் ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது வசந்தியை விரைவில் கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்தே வசந்தி கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் வசந்தியின் முன் ஜாமீன் மனு நீதிபதி பி.புகழேந்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் வசந்தி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, ’’இந்த வழக்கின் தற்போதைய நிலையை அறிய நீதிமன்றம் விரும்புகிறது. வசந்தி கைது செய்யப்பட்ட பிறகான வழக்கின் விசாரணை குறித்து போலீஸாரிடம் அரசு வழக்கறிஞர் தகவல் பெற்று நாளை நீதிமன்றத்துக்குத் தெரிவிக்க வேண்டும்’’ என உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தார்.