தமிழகம்

நிபா வைரஸ்; கேரளாவிலிருந்து வருபவர்களுக்குக் கடும் கட்டுப்பாடுகள்: அமைச்சர் மா. சுப்பிரமணியன்

செய்திப்பிரிவு

நிபா வைரஸ் காரணமாக கேரளாவிலிருந்து தமிழகம் வருவோருக்குக் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பால் 12 வயதுச் சிறுவன் உயிரிழந்துள்ளார். இதனைத் தொடர்ந்து தமிழக எல்லையோரத்தில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இதுகுறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறும்போது, “ஜிகா வைரஸ் வந்தபோதே கேரளாவை ஒட்டிய தமிழகப் பகுதிகளில் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொண்டோம். தொடர்ந்து கேரளாவின் எல்லைப்புறப் பகுதிகளிலிருந்து வருபவர்களுக்குப் பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன. ஆர்டி-பிசிஆர் பரிசோதனை, காய்ச்சல் உள்ளதா என்பதைக் கண்டறிவதற்கான பரிசோதனையும் நடத்தப்பட்டு வருகின்றன. கரோனா தடுப்பூசி இரண்டு டோஸ் செலுத்தியவர்களே பெரும்பாலும் எல்லைக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

இந்த நிலையில் நிபா வைரஸ் குறித்த செய்தி வந்திருக்கிறது. அதுகுறித்த தகவல் தெரிந்ததும் கேரள எல்லையோரத்தில் அமைந்துள்ள 9 மாவட்டங்களில் சுகாதார அதிகாரிகளுக்கும் அவ்வைரஸ் குறித்து அறிவுறுத்தப்பட்டது. அவர்களிடம் பரிசோதனைகளை விரிவுபடுத்தவும், காய்ச்சல் முகாம்களை எல்லையோரம் அதிகரிக்கவும் கூறி இருக்கிறோம். கேரளாவிலிருந்து தமிழகம் வருவோருக்குக் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

தமிழக சுகாதாரத்துறை மிகச் சிறந்த கட்டமைப்பில் உள்ளது. புதிய வைரஸ்கள் வரும்போது அதற்கான ஆலோசனைகளை வழங்குவதற்கு நம்மிடம் சிறந்த மருத்துவர்கள் இருக்கிறார்கள். நிச்சயமாகத் தமிழகம் பாதுகாப்பாகவே உள்ளது” என்றார்.

SCROLL FOR NEXT