தமிழகத்தில் 1-8ஆம் வகுப்புவரை பள்ளிகள் திறப்பது குறித்து வரும் 8ஆம் தேதிக்குப் பிறகு முடிவு எடுக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கரோனா தீவிரம் குறைந்ததன் காரணமாக, செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்புகள் மற்றும் கல்லூரிகளைத் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது.
இந்த நிலையில் 1- 8ஆம் வகுப்பு மாணவ, மாணவியருக்குப் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறும்போது, “ 1- 8ஆம் வகுப்பு மாணவ, மாணவியருக்குப் பள்ளிகள் திறப்பு, முதல்வருடன் ஆலோசித்த பிறகு, செப்டம்பர் 8ஆம் தேதிக்குப் பிறகு முடிவு செய்யப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
9,10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலை 9.30 மணி முதல் மதியம் 3.30 மணிவரை வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. வகுப்பறை மேஜையில் ஒரு முனையில் ஒரு மாணவரும், மற்றொரு முனையில் மற்றொரு மாணவரும் அமர்கின்றனர்.
கரோனா தடுப்பு வழிமுறைகளைப் பள்ளிகள் பின்பற்ற வேண்டும். வகுப்பறைகளில் சானிடைசர்கள் வைத்திருக்க வேண்டும். மாணவர்கள் அச்சம் கொள்ள வேண்டாம். பெற்றோர்கள் அச்சம் கொள்ள வேண்டாம். மாணவர்களைக் கட்டாயமாகப் பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்று நாங்கள் கூறவில்லை. எனினும் பெற்றோர்கள் அக்கறையுடன் மாணவர்களை அனுப்ப வேண்டும். மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது எங்கள் கடமை என்று பள்ளிக் கல்வித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.