மின்துறை தனியார்மயமாக்கும் விவகாரத்தில் புதுச்சேரி சட்டப் பேரவையில் வாக்குவாதம் ஏற்பட் டது. ஆனால், இறுதி வரை முதல் வர், துறை அமைச்சர் பதில் தரவில்லை.
புதுவை சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் பாஜகவைச் சேர்ந்த நியமன எம்எல்ஏஅசோக்பாபு பேசுகையில், "மின் துறையில் ஆன்லைன் மூலமாக கட்டணம் வசூலிக்கின்றனர். ஆனால் கட்டணம் வசூலிப்பதை பதிவு செய்வதில்லை.
இதனால் அடுத்து பில்லில் பழைய கட்டணமும் சேர்ந்து வருகிறது. இது குளறுபடியை ஏற்படுத்துகிறது" என்றார்.
அப்போது எதிர்க்கட்சித்தலை வர் சிவா குறுக்கிட்டு, "மின்துறை தனியார்மயமாக்கப்படும் என மத்திய அரசு கூறியுள்ளது. மின் துறையை தனியார்மயமாக்க போகிறீர்களா? இல்லையா? என தெளி வுபடுத்துங்கள்" என தெரிவித்தார்.
இதையடுத்து பாஜக எம்எல்ஏக்கள் ஜான்குமார், கல்யாணசுந்தரம், விவியன் ரிச்சர்டு, ராம லிங்கம், அசோக்பாபு ஆகியோர் எதிர்கட்சி தரப்பில் சிவா, நாஜிம், கென்னடி, சம்பத், வைத்தியநாதன் ஆகியோர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
ஒரு கட்டத்தில் பாஜக நியமனஎம்எல்ஏ ராமலிங்கம், "தொலைபேசி நிறுவனம் அரசிடம் இருந்த போது தொலைபேசி இணைப்பு பெற 8 ஆண்டு, 10 ஆண்டு காத்திருக்க வேண்டியிருந்தது. தனியார்மயத்தால் வீட்டுக்கு 4 போன் உள்ளது" என்றார்.‘தனியார்மயத்தை ஆதரிக்கிறீர் களா?’ என கேட்டு எதிர்கட்சி உறுப் பினர்கள் கேள்வி எழுப்பினர். இதனால் சபையில் கடும் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது.
அப்போது உறுப்பினர் ராமலிங்கம், "அரசு ஊழியர்கள் மெத்தனமாக செயல்படக்கூடாது. அவர்களின் மெத்தனப்போக்கால்தான் அரசு துறைகள் நஷ்டத்துக்கு செல்கின்றன. மின்துறை தனியார் மயத்தை நான் ஆதரிக்கவில்லை. தனியார் என்றால் மோசம் என் பதும் கிடையாது" என்றார்.
நாஜிம் குறுக்கிட்டு, “மின்துறை தனியார்மயத்தை எதிர்க்கிறோம் என சொல்கிறீர்களா?” என்றார். அப்போது ராமலிங்கம், “இது என்னுடைய தனிப் பட்ட கருத்து” என்றார். உறுப் பினர் அனிபால்கென்னடி குறுக்கிட்டு, “மின்துறை தனியார் மயமாக்கப்படுமா? என்பதை தெளிவுபடுத்த வேண்டும்” என வலியுறுத்தினார். இதற்கிடையில், பாஜக எம்எல்ஏக்களை அமருமாறு அமைச்சர் நமச்சிவாயம்,கூறினார். முதல்வர் ரங்கசாமி, மின்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் அவையில் இருந்தாலும் மின்துறை தனியார்மயம் தொடர்பாக ஆளும்கட்சி தரப்பில் இருந்து எந்த பதிலும் தரப்படவில்லை.