தமிழகம்

பெண் பத்திரிகையாளர்கள் மீது அவதூறு: எஸ்.வி.சேகர் மீதான வழக்கை ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுப்பு

கி.மகாராஜன்

பெண் பத்திரிகையாளர்கள் மீது அவதூறு பரப்பியதாக நடிகர் எஸ்.வி.சேகர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்துள்ளது.

பெண் பத்திரிகையாளர்கள் பணிபுரிவது குறித்துத் தரக்குறைவான கருத்தை நடிகரும், பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர் 2018ஆம் ஆண்டு தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இதனால் எஸ்.வி.சேகர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி எஸ்.வி.சேகர், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி நிஷாபானு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது எஸ்.வி.சேகர் தரப்பில், "அந்தப் பதிவை மனுதாரர் படிக்காமல் பிறருக்குப் பகிர்ந்துள்ளார் (ஃபார்வர்ட்). அதற்கு மன்னிப்பும் கோரியுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டது.

அதற்கு நீதிபதி நிஷாபானு, "படிக்காமல் ஏன் ஃபார்வர்ட் செய்தீர்கள்? அவ்வாறு செய்துவிட்டு, மன்னிப்புக் கேட்டால் சரியாகி விடுமா? என்று கேள்வி எழுப்பினார்.

மனுதாரர் தரப்பில் வழக்கை ரத்து செய்யுமாறு கோரப்பட்டது. அதற்கு வழக்கை ரத்து செய்ய முடியாது என்று குறிப்பிட்ட நீதிபதி, விசாரணையை ஒரு வாரத்திற்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

SCROLL FOR NEXT