தமிழகம்

காலநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்படும் மதுரை; ஆபத்தைத் தடுக்க ஆறு முன்னெடுப்புகள்: சு.வெங்கடேசன்

செய்திப்பிரிவு

காலநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்படும் மாவட்டமாக மதுரை இருக்கிறது என்று இந்திய வானிலைத்துறையின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. இதனைத் தொடர்ந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சு.வெங்கடேசன் எம்.பி. கோரியுள்ளார்.

இதுகுறித்து தமிழக முதல்வருக்கு சு.வெங்கடேசன் எம்.பி. எழுதியுள்ள கடிதத்தின் விவரம்:

“காலநிலை பேரழிவால் வரக்கூடிய பத்தாண்டுகள் மானுடத்திற்கான இருத்தியலை உறுதி செய்வதற்கான தசாப்தமாக இருக்கும் என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலர் தெரிவித்துள்ளபடி, மானுட வரலாற்றின் மிக மிக முக்கியத்துவம் வாய்ந்த காலமாக இந்தக் காலம் இருக்கிறது.

இக்காலத்தில் பசுமையான தமிழகத்தை உருவாக்க, சூழலியல் பார்வையில் பல முன்னெடுப்புகளைச் செய்யும் உங்களுக்கு எனது அன்பான வாழ்த்துகள்.

மத்திய அரசின் புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் "இந்திய வானிலை துறையின் “Observed Rainfall Variability and Changes over Tamil Nadu State” ஆய்வு அறிக்கை வெளிவந்துள்ளது.

இவ்வறிக்கையின்படி தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களிலேயே காலநிலை மாற்றங்களால் அதிகம் பாதிக்கப்படப் போகிற மாவட்டமாக மதுரை இருப்பது தெரியவருகிறது.

மதுரை மாவட்டத்தின் வருடாந்திர சராசரி மழைப்பொழிவு கடுமையாகக் குறைய ஆரம்பித்துள்ளது என்றும், தென்மேற்குப் பருவமழை காலகட்டத்தில் மதுரை மற்றும் தருமபுரி மாவட்டங்களில் பெய்கின்ற மழையின் அளவு குறைந்து வருகிறது என்றும் இவ்வறிக்கை கூறுகிறது.

இதில் வருட சராசரி மழைப்பொழிவு குறிப்பிடத்தக்க அளவு குறைகின்ற தமிழகத்தின் ஒரே மாவட்டம் மதுரையே என்கிறது இந்த ஆய்வு. ஒவ்வொரு மாதமும் பெய்கின்ற மழையின் அளவைக் கணக்கில் கொண்டு, எல்லா மாதமும் சராசரி மழைப்பொழிவு குறைந்து வரக்கூடிய மாவட்டமாக மதுரையைச் சொல்கிறது புவி அறிவியல் துறையின் ஆய்வு. அதுமட்டுமல்லாமல் வறண்ட நாட்களின் (Dry days) எண்ணிக்கையும் மதுரை மாவட்டத்தில் அதிகரிக்கிறது என்றும் தெரிவிக்கிறது.

இவற்றைக் கணக்கில் கொண்டு, நிகழவிருக்கும் ஆபத்தினைத் தடுக்க கீழ்க்கண்ட முன்னெடுப்புகளைச் செய்வது அவசியமாகிறது.

1. மதுரை மாவட்டத்தின் பசுமைப் போர்வையை 33% ஆக அதிகரிக்க சிறப்பு திட்டங்களை அறிவிக்க வேண்டும்.

2. ஏற்கெனவே உள்ள காடுகளை வேறு எந்தப் பயன்பாட்டிற்கும் மாற்றம் செய்யக்கூடாது என்று உத்தரவிட வேண்டும். அக்காடுகளைப் பாதுகாக்க சிறப்பு திட்டங்களை அறிவிக்க வேண்டும்.

3. மதுரை மாவட்டத்தில் உள்ள எல்லா நீர்நிலைகளையும் போர்க்கால அடிப்படையில் மீட்டுருவாக்கம் செய்து அவற்றை முழுக் கொள்ளளவிற்குத் தூர்வார வேண்டும்.

4. வைகையின் பிறப்பிடமான மேற்கு மலைகளைப் பாதுகாக்கத் தேவைப்படும் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

5. வைகை நதியை ஐந்து மாவட்ட நிர்வாக கட்டுப்பாட்டுப் பகுதியாக இல்லாமல் ஒற்றை நிர்வாக அலகின் கீழ் கொண்டுவர வேண்டும்.

6. மதுரை மாவட்டம் தமிழகத்தின் கலாச்சார தலைநகரம், அதன் சூழலை மீட்டுருவாக்கம் செய்வதற்கும், காற்று மாசைக் குறைப்பதற்கும் தேவைப்படும் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டுமென தங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.”

இவ்வாறு அந்தக் கடிதத்தில் சு.வெங்கடேசன் குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT