தமிழகம்

தி இந்து அடையாளம் கண்ட 3 சிறுவர்களுக்கு என்.டி.டி.வி இந்தியன் ஆஃப் தி இயர் விருது!

செய்திப்பிரிவு

'தி இந்து' நிவாரண முகாமில் தன்னார்வலர்களாக செயல்பட்ட அசோக், அர்ஜுன், ஆறுமுகம் ஆகிய மூன்று சிறுவர்களையும் 'இந்தியன் ஆஃப் தி இயர் 2015' ஆக தேர்ந்தெடுத்து இன்று (செவ்வாய்க்கிழமை) விருது வழங்கி என்.டி.டி.வி கவுரவித்தது.

தமிழக மழை - வெள்ளத்தின்போது களத்தில் செயல்பட்டதற்காக, நாட்டுக்கு சேவையாற்றியவர்கள் பிரிவில் இம்மூவருக்கும் இந்த கவுரவும் அளிக்கப்பட்டது.

இதே காரணத்துக்காக, ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அமுதா, கஜலட்சுமி மற்றும் ககன்தீப் சிங் பேடி ஆகிய மூவருக்கும் 'இந்தியன் ஆஃப் தி இயர் 2015' விருது வழங்கப்பட்டது. இவர்களுடன் நடிகர் சித்தார்த்துக்கும் இதே கவுரவம் அளிக்கப்பட்டது.

"நாங்கள் நன்றாக படித்து இன்னும் நாட்டுக்கு சேவையாற்றுவோம்" என்று அசோக், அர்ஜுன், ஆறுமுகம் மூவரும் தெரிவித்தனர்.

‘தி இந்து' குழுமத்தின் சார்பில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கும் பொருட்டு ‘மீண்டு எழுகிறது சென்னை' எனும் பெயரில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.

இந்த நிவாரணப் பணிகளில் தன்னார்வத்தோடு ஈடுபட்ட பலரும் ஈடுபட்டனர். அதில் குறிப்பிட்டத்தக்கவர்கள்தான் இந்த மூன்று சிறுவர்கள். இந்த நிஜ நாயகர்கள் அசோக், அர்ஜுன், ஆறுமுகம் குறித்து கடந்த மாதம் 'தி இந்து' வெளியிடப்பட்ட பகிர்வு:

காலில் சக்கரத்தைக் கட்டியதுபோல சுற்றிச்சுழல்கிறார்கள் அசோக், அர்ஜுன், ஆறுமுகம். மூவருமே சிறுவர்கள். அசோக் எட்டாம் வகுப்பு படிக்கிறான். அர்ஜுனும் ஆறுமுகமும் ஐந்தாவது படிக்கிறார்கள்.

“தம்பிங்களா நீங்க ஒண்ணும் செய்ய வேணாம். ஓரமா உட்காருங்க” என்று சொன்னாலும் கேட்பதாக இல்லை. “அண்ணே எங்களுக்காக எங்கிருந்தோ எல்லாம் வந்து வேலை செய்யறாங்க. நாங்களும் செய்யறோம்ண்ணே” என்கிறார்கள்.

பட்டியலைப் பார்த்து பகுதி வாரியாக தேவைப்படும் பொருட்களை அசோக் வாசிக்கிறான். அவற்றை அர்ஜுனும் ஆறுமுகமும் அட்டைப் பெட்டிகளில் எண்ணி அடுக்குகிறார்கள்.

ஆனால், மூவரின் கதையைக் கேட்டால் கண்ணீர் வருகிறது. மூவரின் வீடுகளுமே வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன. வத்தலகுண்டுவிலிருந்து பிழைப்பு தேடி சென்னைக்கு வந்த குடும்பம் இவர்களுடையது. மூவரின் குடிசைகளும் சேப்பாக்கம் ரயில் பாலத்துக்கு கீழே கூவம் கால்வாய்க்கு ஒட்டியே இருந்திருக்கிறது. மழை வெள்ளத்தில் அத்தனையும் அடித்துச் சென்றுவிட்டது.

இப்போது சில சணல் பை தடுப்புகள் ஒரு டிஜிட்டல் பேனரும்தான் இவர்களின் தற்காலிக வசிப்படமாக இருக்கிறது. ஆனால், அந்த சோகம் கொஞ்சமும் இல்லாமல் உற்சாகமாக இருக்கிறார்கள் சிறுவர்கள். “அய்யோ அண்ணா, அன்னைக்கு பயங்கரமான மழைன்னா. தூங்கிட்டிருந்தப்ப குடிசையோட தண்ணி இழுத்துட்டுப் போயிடுச்சு. அடிச்சுப் புடிச்சி நீந்தி வந்தோம். இங்க கொடுத்த பாயும் போர்வையும் ரெண்டு நாளா உதவியா இருக்கு” என்கிறார்கள் சிறுவர்கள்.

SCROLL FOR NEXT