மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா வரவேற்றார். 
தமிழகம்

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெலிங்டன் வந்தார்

ஆர்.டி.சிவசங்கர்

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெலிங்டன் ராணுவ மையத்துக்கு இன்று வந்தார். நாளை முப்படை அதிகாரிகள் பயற்சி கல்லூரியில் உள்ள வெளிநாட்டு அதிகாரிகளுடன் கலந்துரையாடுகிறார்.

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று (ஆக. 28) டெல்லியில் இருந்து கோவை வரை ராணுவ விமானத்தில் வந்தார். பின்னர் கோவையிலிருந்து சாலை மார்க்கமாக மதியம் 3.30 மணியளவில் குன்னூர் வெலிங்டன் ராணுவ மையத்துக்கு வந்தார்.

வெலிங்டன் ராணுவ மையத்துக்கு வந்த பாதுகாப்புத்துறை அமைச்சரை மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா, முப்படை அதிகாரிகள் பயிற்சி கல்லூரி கமாண்டென்ட் எம்ஜேஎஸ் கலோன், வெலிங்டன் ராணுவ மைய தலைவர் பிரிகேடியர் ராஜேஸ்வர் சிங், மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி வரவேற்றனர்.

நாளை (ஆக. 29) காலையில் வெலிங்டனில் உள்ள முப்படை அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரியில் நடப்பாண்டில் பயிற்சியில் பங்கேற்றுள்ள வெளிநாட்டு ராணுவ அதிகாரிகளுடன் கலந்துரையாற்றுகிறார்.

இது குறித்து, முப்படை அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரி நிர்வாக அதிகாரிகள் கூறுகையில், "கல்லூரியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பயிற்சியில் பங்கேற்றுள்ள வெளிநாட்டு ராணுவ அதிகாரிகளுக்கு அவரவர் மொழியில் மொழியாக்கம் செய்வதற்காக தேவையான மொழிபெயர்ப்பாளர்களும் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.

இதைத்தொடர்ந்து, நாளை பிற்பகலில் வெலிங்டனில் இருந்து புறப்பட்டு கோவை சென்று அங்கிருந்து ராணுவ விமானம் மூலம் டெல்லி திரும்புகிறார். பாதுகாப்புத் துறை அமைச்சருடன் 14 ராணுவ உயர் அதிகாரிகளும் வெலிங்டன் ராணுவ மைய நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர்" என்றனர்.

SCROLL FOR NEXT