சென்னை உயர் நீதிமன்றம்: கோப்புப்படம் 
தமிழகம்

தமிழ்நாடு பிரஸ் கவுன்சில் அமைப்பை மூன்று மாதங்களில் ஏற்படுத்த வேண்டும்: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

ஆர்.பாலசரவணக்குமார்

போலிப் பத்திரிகையாளர்களைக் களைய ஏதுவாக, உச்ச நீதிமன்ற அல்லது உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில், தமிழ்நாடு பிரஸ் கவுன்சில் என்ற அமைப்பை மூன்று மாதங்களில் ஏற்படுத்த வேண்டும் எனத் தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரியாகப் பணியாற்றியபோது, பொன். மாணிக்கவேல், தவறான அறிக்கைகளைத் தாக்கல் செய்தது குறித்து, தனிப்படை அமைத்து விசாரிக்கக் கோரி, சென்னையைச் சேர்ந்த சேகர் ராம் என்பவர் பத்திரிகையாளர் எனக் கூறி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணையின்போது, சேகர் ராம் போலிப் பத்திரிகையாளர் என, பொன். மாணிக்கவேல் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து, தமிழகத்தில் போலிப் பத்திரிகையாளர்களைக் களை எடுப்பது தொடர்பாக, விசாரணையை விரிவுபடுத்தியது உயர் நீதிமன்றம்.

இந்த வழக்கை இன்று (ஆக.28) விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேல்முருகன் அடங்கிய அமர்வு, உச்ச நீதிமன்ற அல்லது உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில், மூத்த பத்திரிகையாளர்கள், அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் அடங்கிய தமிழ்நாடு பிரஸ் கவுன்சில் என்ற அமைப்பை 3 மாதங்களில் ஏற்படுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.

பிரஸ் கிளப் மற்றும் பத்திரிகையாளர் சங்கங்களை அங்கீகரிக்கும் அதிகாரத்தை, பிரஸ் கவுன்சிலுக்கு மட்டுமே வழங்க வேண்டும் என்றும், சாதி, மத, மொழி அடிப்படையில் பத்திரிகையாளர் சங்கங்களை அனுமதிக்கக் கூடாது என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தமிழ்நாடு பிரஸ் கவுன்சில் மட்டுமே பத்திரிகையாளர் சங்கங்களுக்குத் தேர்தல் நடத்த வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், தமிழ்நாடு பிரஸ் கவுன்சில் மூலமாக மட்டுமே பத்திரிகையாளர்களுக்கு வீட்டு மனை, இலவச பஸ் பாஸ் உள்ளிட்ட சலுகைகள் வழங்க வேண்டுமே தவிர, நேரடியாக வழங்கக் கூடாது என உத்தரவிட்டனர்.

போலிப் பத்திரிகையாளர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு எதிராகக் காவல் நிலையத்தில் புகார் அளிக்க கவுன்சிலுக்கு அதிகாரம் வழங்க வேண்டும் எனவும், இந்த அடிப்படையில் அங்கீகார அடையாள அட்டை வழங்கும் விதிகளில் 3 மாதங்களில் உரிய திருத்தம் கொண்டு வரவேண்டும் எனவும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

இந்த உத்தரவுகளை அமல்படுத்தியது தொடர்பான அறிக்கையை 4 வாரங்களில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், தவறினால் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என்றும் எச்சரித்த நீதிபதிகள், விசாரணையை ஆறு வாரங்களுக்குத் தள்ளிவைத்தனர்.

SCROLL FOR NEXT