தமிழகம்

முகாம்களில் உள்ள இலங்கை தமிழர் மீதான வழக்குகளை விரைவாக முடிக்க காவல் துறைக்கு உத்தரவு: பேரவையில் முதல்வர் ஸ்டாலின் தகவல்

செய்திப்பிரிவு

முகாம்களில் உள்ள இலங்கை தமிழர் உள்ளிட்டோர் மீதுள்ள வழக்குகளை விரைவாக முடிக்ககாவல் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் 110-வதுவிதியின் கீழ், முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கான திட்டங்கள் குறித்து முதல்வர் ஸ்டாலின் நேற்று அறிவித்தார்.

வழக்கை ரத்து செய்ய கோரிக்கை

இதற்கு நன்றி தெரிவித்து பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி.வேல்முருகன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா ஆகியோர், ‘‘இரண்டு முகாம்களில் வாழும் இலங்கை தமிழர்கள் உள்ளிட்டோர் மீதான வழக்குகளை ரத்து செய்து, அவர்களை வெளியில் மற்றவர்களுடன் வாழ அனுமதிக்க வேண்டும்’’ என்று கோரிக்கை விடுத்தனர்.

இதற்கு பதில் அளித்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:

நிலுவை வழக்குகள்

திருச்சி சிறப்பு முகாமில் 80 இலங்கை தமிழர்கள் உட்பட 115 பேர் உள்ளனர். இவர்களில் 47 பேர் மீதான வழக்குகள் புலன்விசாரணையில் உள்ளன. இலங்கை தமிழர்கள் மீதான63 வழக்குகளில் 25 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

முகாமில் அவர்களுக்கு தொலைக்காட்சி, வானொலி வசதிகள் செய்யப்பட்டுள்ளன. உறவினர்களை சந்தித்து உரையாடவும் வசதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஜூலையில் இலங்கைதமிழர்கள் 3 பேர் மீதான வழக்குகள் முடிக்கப்பட்டு நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இந்த முகாம்களில் உள்ளவர்கள் மீதான வழக்குகளை விரைவாக முடிக்க உத்தரவிட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு முதல்வர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT