சசிகலா: கோப்புப்படம் 
தமிழகம்

சசிகலாவுக்கு எதிரான வருமான வரி, அபராதத்தைக் கைவிட முடியாது: உயர் நீதிமன்றத்தில் வருமான வரித்துறை தகவல்

ஆர்.பாலசரவணக்குமார்

குற்ற வழக்கில் சசிகலா தண்டிக்கப்பட்டுள்ளதால், வருமான வரி மற்றும் அபராதத்தைக் கைவிட முடியாது என, சென்னை உயர் நீதிமன்றத்தில் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

வி.கே.சசிகலா, கடந்த 1994-95 ஆம் ஆண்டுக்கான வருமான வரிக் கணக்கு தாக்கலில், 28 லட்சத்து 86 ஆயிரம் ரூபாய்க்குக் கணக்கு தாக்கல் செய்திருந்தார். அதைத் தொடர்ந்து, நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில், சசிகலா அதே நிதியாண்டில் 80 ஏக்கர் நிலத்தை வாங்கி, கணக்கில் காட்டாமல் மறைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடர்பாக, லஞ்ச ஒழிப்புத்துறை அளித்த அறிக்கையின் அடிப்படையில், 1994-95 ஆம் ஆண்டுக்கான வருமான வரியாக 48 லட்சம் ரூபாய் செலுத்தும்படி சசிகலாவுக்கு 2002-ம் ஆண்டு வருமான வரித்துறை உத்தரவிட்டது. ஆனால், வருமான வரித்துறையின் இந்த உத்தரவை மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம் ரத்து செய்தது.

மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தின் இந்த உத்தரவை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் வருமான வரித்துறை சார்பில் வழக்குத் தொடரப்பட்டது. கடந்த 2008-ம் ஆண்டு முதல் நிலுவையில் இருந்த வழக்கு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, ஒரு கோடி ரூபாய்க்கும் குறைவான தொகை என்பதால், தனக்கு எதிரான வருமான வரித்துறை உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று, சசிகலா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு வருமான வரித்துறை தரப்பில், ஒரு கோடி ரூபாய்க்கும் குறைவான அபராதம் தொடர்பான வழக்கைக் கைவிடுவதாக, மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் சுற்றறிக்கை சசிகலா வழக்குக்குப் பொருந்தாது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இவ்வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சிவஞானம் தலைமையிலான அமர்வு முன்பு இன்று (ஆக.26) விசாரணைக்கு வந்தது. அப்போது, வருமான வரித்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், குற்ற வழக்கில் சசிகலா தண்டிக்கப்பட்டுள்ளார். எனவே, அவருக்கு வருமான வரி மற்றும் அபராதத்தைக் கைவிடும் சுற்றறிக்கை இவருக்குப் பொருந்தாது என்றும் தெரிவித்தார்.

சென்னை உயர் நீதிமன்றம்: கோப்புப்படம்

இதற்கு சசிகலா தரப்பில், நேரடி வரிகள் வாரியத்தின் இந்த உத்தரவு தங்களுக்குப் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக, சசிகலா தரப்பில் மனுத்தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை செப்டம்பர் 8ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

ஒரு கோடி ரூபாய்க்கும் குறைவான வருமான வரி மற்றும் அபராதம் தொடர்பான வழக்குகளைக் கைவிடும் முடிவின் அடிப்படையில், நடிகர் ரஜினிகாந்துக்கு எதிரான வழக்கை வருமான வரித்துறை திரும்பப் பெற்றதன் அடிப்படையில், இந்த வழக்கை சசிகலா தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT