தமிழகம்

தகவல் உரிமை சட்டத்தின் கீழ் பதிலளிக்கும் அதிகாரி ஒவ்வொரு பக்கத்திலும் கையெழுத்திட உத்தரவு

செய்திப்பிரிவு

சென்னை உயர் நீதிமன்றத்தில் சிற்றரசு என்பவர் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘‘சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்திடமும், அயனாவரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்திடமும் சில தகவல்களை வழங்கும்படி தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பித்து இருந்தேன்.

ஆனால் பொது தகவல் அதிகாரிகள் முறையாக பதிலளிக்கவில்லை. எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” என்று கோரியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி எஸ்.வைத்யநாதன் முன்பாக விசாரணைக்கு வந்தபோது, தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் அளிக்கப்பட்ட மனுவுக்கு அதிகாரிகள் வேண்டுமென்றே தவறான தகவல்களை அளித்ததாக மனுதாரர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

அதையடுத்து நீதிபதி, “பொது தகவல் அலுவலர் அல்லது தகவல் ஆணையம் அளிக்கும் தகவல்களில் ஏதேனும் குறைபாடுகள் இருப்பின் அதை எதிர்த்து மேல் முறையீட்டு அதிகாரியிடம் மேல் முறையீடு செய்ய தகவல் உரிமைச் சட்டம் அதிகாரம் வழங்கியுள்ளது.

அதேநேரம், தவறான தகவல்களை அளிக்கும் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க ஏதுவாக, விண்ணப்பங்களுக்கு பதிலளிக்கும் ஒவ்வொரு பக்கத்திலும் சம்பந்தப்பட்ட பொது தகவல் அதிகாரி கையெழுத்திட்டு, அவரது ஆதார் எண் விவரங்களையும் வழங்க வேண்டும். இதுதொடர்பாக தகவல் ஆணையம், சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்” என உத்தரவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT