புதுச்சேரி பாஜக தலைமை அலுவலகத்தில் சிறுபான்மையினர் அணி செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது
மாநில சிறுபான்மையினர் அணிதலைவர் விக்டர் விஜய் தலைமையில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் தேசிய சிறுபான்மையினர் அணி தலைவர் ஜமால் சித்திக், தேசிய சிறுபான்மையினர் அணி செயலாளர் இப்ராஹிம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர். புதுச்சேரி பாஜக மாநில தலைவர் சாமிநாதன் மற்றும் சிறுபான்மையினர் அணி அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
சிறுபான்மையினர் அணி செயற்குழு கூட்டத்தில் தேசியத் தலைவர் ஜமால் சித்திக் பேசுகையில்,
“பிரதமர் மோடியின் அனைத்து திட்டங்களும் இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் என எவ்வித பாரபட்சமும் இல்லாமல் உள்ளது. சிறுபான்மையினருக்கு எதிரான கட்சி என்று பொய் பிரச்சாரத்தை எதிர்க்கட்சிகள் செய்து அரசியல் லாபம் அடைய நினைக்கிறார்கள். பாஜக அனைவருக்குமான கட்சி. ‘இந்துத்துவா’என்பது வாழ்வியல் நெறி முறைகளை தெரிவிக்கக்கூடிய ஒன்று; அனைத்து மதத்தினருக்கும் பொதுவானது.
காஷ்மீரில் உள்ள அனைத்து முஸ்லிம்களும் இன்று பாஜகவை ஆதரிக்கிறார்கள். சிறுபான்மையினருக்கு எதிரான கட்சி என்ற எதிர்க்கட்சிகளின் பொய் பிரச்சாரத்தை இனி மக்கள் ஏற்க மாட்டார்கள்
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல்களில் மேற்குவங் காளத்தில் சிறுபான்மையினருக்கு 9 இடங்களையும் அசாமில் 8 இடங்களையும் கேரளாவில் 12 இடங்களையும் புதுச்சேரி மாநிலத்தில் இரண்டு இடங்களையும் பாஜக வழங்கியது. சிறுபான்மையின மக்கள் அனைவரும் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற நோக்கத்தோடு செயல்பட வேண்டும் அப்போதுதான் சிறுபான்மையினர் மத்தியில் எழுச்சி ஏற்படும்
தமிழ் பேசும் மாநிலங்களில் தாமரை மலரவே மலராது என எதிர்க்கட்சிகள் தெரிவித்த நிலையில், புதுச்சேரியில் பாஜக கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது என்று குறிப்பிட்டார்.