தமிழகம்

ஒரேமாதிரியாக இருக்கும் செல்போன் எண்ணில் அழைத்து நூதன முறையில் நடக்கும் பணமோசடி: எச்சரிக்கையுடன் இருக்க போலீஸார் அறிவுரை

செய்திப்பிரிவு

வாடிக்கையாளரின் செல்போன் எண்களைப்போல ஒரே மாதிரியாக இருக்கும் செல்போன் எண்களில் இருந்து அழைக்கும் மர்மநபர்கள் நூதன முறையில் பணமோசடியில் ஈடுபடுகின்றனர். எனவே, வாடிக்கையாளர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என சைபர் கிரைம் போலீஸார் அறிவுரை வழங்கியுள்ளனர்.

வங்கி மேலாளர் பேசுவதாகக் கூறி வாடிக்கையாளர்களின் வங்கி விபரங்களை பெற்று சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் உள்ள பணத்தை திருடும் சம்பவம் ஆங்காங்கே தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதுஒருபுறம் இருக்க தற்போது நூதன முறையில் மேலும் ஒரு பணமோசடி நடைபெற்று வருகிறது. அதன்படி, செல்போனில் அழைக்கும் நபரின் செல்போன் எண்ணில் ஏதாவது ஒரு எண் மட்டும் மாறுபாடாக இருக்கும்.மீதம் உள்ள 9 எண்களும் ஒரே மாதிரி இருக்கும்.

அவர்கள் தாங்கள் மகாராஷ்டிராவில் இருந்து பேசுவதாகவும் அரசு தேர்வுக்கு விண்ணப்பித்து ஒரு எண் மாறுதலாக தங்களது எண்ணை தவறாக கொடுத்து விட்டதாகவும் தெரிவிப்பார்கள். ``இந்த எண்ணுக்கு வரும் ஓடிபியை தெரிவித்தால்தான் தேர்வு எழுத முடியும். அரசு வேலை பெற முடியும். எனது வாழ்க்கை உங்கள் கையில்தான் உள்ளது. எனவே, சற்று நேரத்தில் வரும் ஓடிபி எண்ணை மட்டும் தெரிவித்தால் போதும்'' என கெஞ்சி கேட்பார்கள்.

நாம் பரிதாபப்பட்டு நமது செல்போனுக்கு வரும் ஓடிபி எண்ணை தெரிவித்து விட்டால் நமது வங்கி கணக்கில் இருக்கும் பணம் முழுவதையும் ஆன்லைன் நடைமுறை மூலம் எடுத்து விடுவார்கள்.

நூதன முறையில் இந்த பணமோசடி நடைபெற்று வருகிறது. எனவே, இந்த விவகாரத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். யாருக்கும் ஓடிபி எண்ணை பகிர கூடாது. மேலும், வங்கியிலிருந்து வருவதுபோல லிங்க் எதுவும் செல்போனுக்கு வந்தால் அதையும் கிளிக் செய்வதை அறவே தவிர்க்க வேண்டும் என சைபர் கிரைம் போலீஸார் அறிவுறுத்தி உள்ளனர்.

SCROLL FOR NEXT