தமிழகத்தில் செப்டம்பர் 6 வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக, தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று (ஆக. 21) வெளியிட்ட அறிவிப்பு:
"தற்போது தமிழகத்தில் நடைமுறையில் உள்ள ஊரடங்கு 23.08.2021 அன்று காலை 6 மணியுடன் முடிவடையும் நிலையில், அண்டை மாநிலங்களில் நோய்த்தொற்றின் தாக்கம், ஊரடங்கு கட்டுப்பாடுகள், தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு மற்றும் கரோனா கட்டுப்பாடு நடவடிக்கைகளின் செயலாக்கம் குறித்து இன்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், கடந்த முறை எடுக்கப்பட்ட முடிவுகள், தற்போதுள்ள நோய்த்தொற்று நிலையின் அடிப்படையில் எடுக்கப்பட வேண்டிய முடிவுகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டன. மேலும், மாநிலத்தில் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டியதன் அவசியம் மற்றும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் விவாதிக்கப்பட்டது.
மேற்குறிப்பிட்ட ஆலோசனைக் கூட்டத்தின் அடிப்படையில், நடைமுறையில் உள்ள கோவிட் - 19 நோய் பரவல் தடுப்புக்கான கட்டுப்பாடு 06.09.2021 காலை 6.00 மணி வரை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்படுகிறது".
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும், செப்.1 முதல் 9 - 12ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பள்ளிகள் திறக்கப்படும் என்றும், மதிய உணவுத் திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
முழுமையாகப் படிக்க: செப்.1 முதல் பள்ளிகள் திறப்பு; மதிய உணவும் வழங்கப்படும்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு