தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு செப்.15, 16 மற்றும் 23, 24ஆகிய தேதிகளில் ஆன்லைன் வழியாகநடத்தப்பட உள்ளது. இதற்காக, மாணவர்கள் செப்.1-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின்கீழ் 43 மத்தியபல்கலைக்கழகங்கள் இயங்கி வருகின்றன. அதில், திருவாரூர் மாவட்டம் நீலக்குடியில் செயல்பட்டுவரும் தமிழ்நாடு மத்தியபல்கலைக்கழகத்தில் 2020-21-ம் ஆண்டுமாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வுகளுக்கு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து மத்திய பல்கலைக்கழக இணையதளத்தில் தெரிவித்துள்ளது: தமிழ்நாடு, பிஹார், ராஜஸ்தான், கர்நாடகா, ஜார்கண்ட், ஜம்மு, ஹரியானா, குஜராத், ஆந்திரபிரதேசம், அசாம், பஞ்சாப், கேரளா ஆகிய 12 மாநிலங்களை ஒருங்கிணைத்து, செப்.15, 16 மற்றும் 23, 24 ஆகிய தேதிகளில் நுழைவுத் தேர்வுகள் நடைபெற உள்ளன. அதன்படி, இயற்பியல், வேதியியல், கணிதம், உயிரி அறிவியல், பொருளாதாரம் போன்ற பாடங்களுக்கான ஒருங்கிணைந்த முதுநிலை பட்டப் படிப்புகளுக்கும், பிஎஸ்சி, பி.எட் போன்ற இளநிலை பட்டப் படிப்புகளுக்கும் இந்த நுழைவுத் தேர்வுகள் நடைபெற உள்ளன.
தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படிக்க விரும்பும் மாணவ,மாணவிகள் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க செப்.1-ம் தேதியும், நுழைவுத் தேர்வுக்கான கட்டணம் செலுத்த செப்.2-ம் தேதியும் கடைசி நாளாகும். மாணவர்கள் தங்களின் விண்ணப்பங்களை மத்திய பல்கலைக்கழகத்தின் இணையதள முகவரியான http://cucet.nta.nic.in வாயிலாகவிண்ணப்பிக்க வேண்டும். கரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக நுழைவுத் தேர்வுகள் ஆன்லைன் வழியாக மட்டுமே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.