போலந்து நாட்டில் நடைபெற உள்ளகாதுகேளாதோருக்கான சர்வதேச தடகளப் போட்டியில் பங்கேற்கச் சென்றுள்ள, குமரி மாவட்டத்தைச் சேர்ந்த வீராங்கனை சமீஹா பர்வீன் வெற்றி பெற வாழ்த்துவதாக விளையாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது: நான்காவது உலக காதுகேளாதோருக்கான தடகள சாம்பியன்ஷிப் போட்டி வரும் 23 முதல் 28-ம் தேதி வரை போலந்து நாட்டில் நடைபெறுகிறது.
இதில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த வீராங்கனை சமீஹா பர்வீன் நீளம் தாண்டுதலில் இந்தியா சார்பில் பங்கேற்க தேவர்வாகியுள்ளது, ஒட்டுமொத்த தமிழகத்துக்கும் பெருமிதமான செய்தியாகும்.
வாழ்வில் பல போராட்டங்களை தனது மன உறுதியாலும், கடுமையான உழைப்பாலும் தொடர்ந்து வென்று வரும் வீராங்கனை சமீஹா பர்வீன், இந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் சர்வதேச அரங்கில் தமிழகத்தின் பெருமையை நிலைநாட்டுவார் என்று அனைவரும் உறுதியாக நம்புகிறோம்.
லட்சியத்தை நோக்கி மனம் தளராமல் முன்னேறும் சமீஹா, தமிழக வீரர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்கிறார். அவரது வெற்றி, சாதிக்கத் துடிக்கும் ஒவ்வொருவருக்கும் நம்பிக்கை ஒளியூட்டும்.
முதல்வரின் வழிகாட்டலில் தொடர்ந்து முன்னேறி வரும் தமிழக விளையாட்டுத் துறைக்கு சமீஹா பர்வீன் பெறப்போகும் வெற்றி மிக முக்கியத்துவம் வாய்ந்த, சர்வதேச அங்கீகாரமாக இருக்கும். அவர் சர்வதேசப் போட்டியில் வெற்றிபெற முதல்வர் சார்பாக வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.