சிவகங்கை தொல்நடைக் குழு நிறுவனர் புலவர் கா.காளிராசா, தலைவர் நா.சுந்தரராஜன் மற்றும் புத்தக்கடை முருகன் ஆகியோர் முத்துப்பட்டி பகுதியில் உள்ள தனியார் இடத்தில் 16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த நவகண்ட சிலையைக் கண்டறிந்துள்ளனர்.
இதுகுறித்துப் புலவர் கா.காளிராசா கூறும்போது, ''பழங்காலத்தில் தங்களது அரசர் போரில் வெல்ல வேண்டும் என வேண்டிக்கொண்டு கொற்றவை தெய்வம் முன்பாக வீரர்கள் தங்களை பலி கொடுக்கும் பழக்கம் இருந்தது. இதில் நவகண்டம் என்பது உடலில் 9 இடங்களில் வெட்டிக் கொண்டு உயிரை விடுவர். அவ்வீரர்களை நினைவுபடுத்தும் வகையில் சிலை வடிவமைக்கப்படும்.
மேலும் இப்பழக்கம் 9-ம் நூற்றாண்டு முதல் 13-ம் நூற்றாண்டு காலகட்டத்தில் அதிகமாக இருந்தது. அதன்பிறகு படிப்படியாகக் குறையத் தொடங்கியது. முத்துப்பட்டியில் கண்டறியப்பட்ட நவகண்டம் சிலை 16-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது.
இச்சிலை மூன்றடி உயரத்தில், ஒன்றரை அடி அகலத்தில் உள்ளது. தலைமுடிகள் கொண்டையாக கட்டியபடியும், சிதறிய 3 கற்றைகளாகவும் உள்ளன. முகத்தில் மீசை காட்டப்பட்டுள்ளது, கழுத்தில் வேலைப்பாடுடன் கூடிய ஆபரணமும், கையில் கழல் போன்ற ஆபரணமும் உள்ளன.
மேலாடை தொங்குவதைப் போல் உள்ளது. இடுப்பில் உறையுடன் கூடிய குத்துவாள், கால்களில் காலணிகள் உள்ளன. ஒரு கை வில்லுடனும், மற்றொரு கை சிதைந்து உள்ளது. கழுத்தில் வலதுபுறத்தில் இருந்து இடதுபுறமாகக் கத்தி குத்தியபடி உள்ளது.
மேலும் எங்களது கோரிக்கையை ஏற்று நவகண்ட சிலையை சிவகங்கை அருங்காட்சியகத்தில் ஒப்படைக்க நில உரிமையாளர் ஒப்புக் கொண்டுள்ளார்'' என்று தெரிவித்தார்.