தமிழகத்தில் உள்ள அனைத்துக் கடற்படை தளங்கள் மீது ட்ரோன் உள்ளிட்டவை பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சென்னையில் ஐஎன்எஸ் அடையாறு, அரக்கோணத்தில் ஐஎன்எஸ் ராஜாளி, ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளியில் உள்ள ஐஎன்எஸ் பருந்து,திருநெல்வேலியில் ஐஎன்எஸ் கட்டபொம்மன் உள்ளிட்ட கடற்படை தளங்கள் உள்ளன. இந்த கடற்படைதளங்களுக்கு பாதுகாப்பை மேலும் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்தக் கடற்படை தளங்கள் மீது ட்ரோன்கள், ஆளில்லா விமானங்கள் உள்ளிட்டவை பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
எனினும், தடை செய்யப்பட்ட இப்பகுதியில் ட்ரோன்கள் உள்ளிட்டவை இயக்க சம்பந்தப்பட்ட அரசுதுறைகள், தனியார் ஏஜென்சிகள், பொது சிவில் விமான இயக்குநரகத்திடம் முன் அனுமதி பெற வேண்டும். இதுதொடர்பாக, ‘டிஜிஸ்கை’ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஒப்புதல் கிடைத்த பிறகு, அதற்கான அனுமதி கடிதத்தை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கான கடற்படை தலைமை அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என, பாதுகாப்புத் துறை பத்திரிகை தகவல் அலுவலகம் தெரிவித்துள்ளது.