பிரதிநிதித்துவப் படம் 
தமிழகம்

தமிழகத்தில் 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

செய்திப்பிரிவு

தமிழகத்தில் 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் இன்று (ஆக. 18) வெளியிட்ட அறிவிப்பு:

"வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தில் இன்று கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கனமழையும், நீலகிரி, கோவை, கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்கள் புதுவை, காரைக்கால் பகுதிகளில், ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணிநேரத்துக்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

அடுத்த 48 மணிநேரத்துக்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்ச மழை அளவு (சென்டிமீட்டரில்):

புதுக்கோட்டை 9, நன்னிலம் (திருவாரூர்) 8, திருவிடைமருதூர் (தஞ்சாவூர்), சிதம்பரம் (கடலூர்) தலா 7, மயிலாடுதுறை 6, கள்ளக்குறிச்சி 5, பட்டுக்கோட்டை (தஞ்சாவூர்), கீழச்செருவை (கடலூர்) தலா 4, கூடலூர் பஜார் (நீலகிரி), மேட்டுப்பட்டி (மதுரை), காரைக்கால், திருப்பத்தூர் (சிவகங்கை) தலா 3, செந்துறை (அரியலூர்), கொடைக்கானல், செட்டிக்குளம் (பெரம்பலூர்), பெரியகுளம் (தேனி), அன்னூர் (கோவை) தலா2, கோபிசெட்டிபாளையம் (ஈரோடு), பொன்மலை (திருச்சி) தலா 1.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

வங்கக்கடல் பகுதிகள்:

18.08.2021: மன்னார் வளைகுடா மற்றும் தென் மேற்கு வங்கக்கடல் ஒட்டிய தென் கிழக்கு இலங்கை கடலோர பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 35-45 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.

மீனவர்கள் இப்பகுதிகளுக்கு எச்சரிக்கையுடன் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அரபிக்கடல் பகுதிகள்:

18.08.2021 முதல் 20.08.2021 வரை: தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40-50 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.

மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்".

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT