தமிழிசை சவுந்தரராஜன் தன் தாயாருடன்: கோப்புப்படம் 
தமிழகம்

தாயார் மறைவு; தெலங்கானா ஆளுநர் தமிழிசை உருக்கம்: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

செய்திப்பிரிவு

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனின் தாயார் உடல்நலக்குறைவால் காலமானார்.

புதுச்சேரி துணைநிலை ஆளுநரும் தெலங்கானா மாநில ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜனின் தாயாரும், காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தனின் மனைவியுமான கிருஷ்ணகுமாரி (78) இன்று (ஆக. 18) காலை வயது மூப்பு காரணமாக காலமானார்.

தனது தாய் மறைவு பற்றி தமிழிசை தன் ட்விட்டர் பக்கத்தில், "என்னை பார்த்து பார்த்து ஊட்டி வளர்த்த எனது தாயார் இன்று அதிகாலை என்னை விட்டு பிரிந்து சென்றார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். வாழ்க்கையில் நீ எந்த அளவுக்கு உயர்ந்தாலும் ஏழை, எளிய மக்களுக்கு உதவி செய்யவே இறைவன் உன்னை படைத்தார் என்று சொல்லி நல்லொழுக்கத்துடன் வாழ கற்றுக்கொடுத்தவர் எனது தாயார்.

என் தாயாரின் இறுதி ஆசைப்படி சாலிகிராமத்தில் உள்ள எனது இல்லத்தில் இன்று மாலை 4 மணியளவில் இறுதி அஞ்சலிக்காக என் தாயாரின் உடல் வைக்கப்பட்டு, நாளை உடல் நல்லடக்கம் செய்யப்படும் என்பதை கண்ணீருடன் பகிர்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

தமிழிசை தாயாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின், "காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் மனைவியும் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தாயாருமான கிருஷ்ணகுமாரி இன்று அதிகாலை உடல்நலக் குறைவால் மறைந்தார் என்ற செய்திகேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன்.

உற்ற துணையை இழந்து வாடும் குமரி அனந்தனுக்கும், தாயை இழந்த துயரத்தில் உள்ள தமிழிசை சவுந்தரராஜனுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.

          
SCROLL FOR NEXT