மாரியப்பன் குடும்பத்தினரிடம் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் பேசினார். 
தமிழகம்

பாரா ஒலிம்பிக் போட்டியில் இம்முறையும் தங்கம் வெல்வார்: மாரியப்பன் தாயார் பிரதமர் மோடியிடம் நெகிழ்ச்சி

வி.சீனிவாசன்

பாரா ஒலிம்பிக் போட்டியில் இம்முறையும் மாரியப்பன் தங்கம் வெல்வார் என, அவரது தாய் பிரதமர் மோடியிடம் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

மாற்றுத்திறனாளிகள் மட்டும் பங்கேற்கும் பாரா ஒலிம்பிக் போட்டிகள், வரும் 24-ம் தேதி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் தொங்குகிறது. பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் கலந்து கொள்ளும் வீரர்கள் மற்றும் அவரது குடும்பத்தினருடன் இந்திய பிரதமர் மோடி இன்று (ஆக. 17) காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார்.

கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் சேலத்தை சேர்ந்த மாரியப்பன் முதல் இடம் பிடித்து, உலக சாதனை படைத்து, தங்கம் வென்றார். இந்தாண்டும் பாரா ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கவுள்ள தமிழக வீரரான மாரியப்பன் மற்றும் அவரது குடும்பத்தினருடன் இன்று பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் உரையாடினார். சேலம், பெரியவடுகம்பட்டியை சேர்ந்த மாரியப்பன் தாயார் சரோஜா, சகோதரர்கள் குமார், கோபி ஆகியோருடன் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலமாக கலந்துரையாடினார்.

சேலம் மாவட்டம் காடையாம்பட்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட பெரியவடுகம்பட்டியில் உள்ள கிராமத்தில் வசித்து வரும் மாரியப்பன் தாயார் சரோஜாவிடம் உரையாடிய பிரதமர் மோடி, கடந்த பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்த மாரியப்பன், இம்முறையும் பாரா ஒலிம்பிக் போட்டியில் வெற்றி பெற்று முன்னேற்ற பாதையில் செல்ல குடும்பத்தினரின் பங்களிப்பு மிக அவசியம் என்றார்.

மேலும், அவர் மாரியப்பன் விரும்பி உண்ணும் உணவு முறைகள் குறித்து கேட்டறிந்தார். இதற்கு பதில் அளித்த மாரியப்பன் தாயார் சரோஜா, "தற்போது நடக்கவுள்ள பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்த முறையும் நிச்சயம் மாரியப்பன் தங்கம் வெல்வார் என்ற நம்பிக்கை மிகுதியாக உள்ளது. மாரியப்பனுக்கு நாட்டுக் கோழியும் ஆட்டுக்கால் சூப் விரும்பி சாப்பிடுவார் என்பதால், வீட்டுக்கு வரும் போதெல்லாம் அவருக்கு நாட்டு கோழி, ஆட்டுக்கால் சூப்பும் தருவேன்" என்று பதில் அளித்தார்.

சரோஜாவின் தாயாரிடம் தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, "நாட்டுக்கு நல்ல மகனை தந்ததற்கு நன்றிகள்" என்றார். மாரியப்பன் சகோதரர்கள் குமார், கோபியிடம் பேசிய பிரதமர் மோடி, மாரியப்பன் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்ததோடு, மாரியப்பன் வருங்காலத்தில் நிகழ்த்தும் பல்வேறு சாதனைகளுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். முன்னதாக, மாரியப்பன் குடும்பத்தினரை சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

SCROLL FOR NEXT