புதுச்சேரியில் தொடர்ந்து 3-வது நாளாக கரோனா ஒரு நாள் எண்ணிக்கை 100-க்கும் கீழ் குறைந்துள்ளது. மேலும் உயிரிழப்பு ஏற்படவில்லை.
இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறைச் செயலர் அருண் இன்று (ஆக.17) வெளியிட்ட தகவலில், ‘‘புதுச்சேரி மாநிலத்தில் 3,269 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரி - 36, காரைக்கால் - 2, ஏனாம் - 2, மாஹே - 20 பேர் என மொத்தம் 60 (1.84 சதவீதம்) பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இதனால் புதுச்சேரி மாநிலத்தில் மொத்த பாதிப்பு 1 லட்சத்து 22 ஆயிரத்து 391 ஆக அதிகரித்துள்ளது. தற்போது மருத்துவமனைகளில் 190 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 666 பேரும் என மொத்தமாக மாநிலம் முழுவதும் 856 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மேலும், புதிதாக உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,805 ஆகவும், இறப்பு விகிதம் 1.47 சதவீதமாகவும் உள்ளது.
புதிதாக 96 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 19 ஆயிரத்து 730 (97.83 சதவீதம்) ஆக உள்ளது. இதுவரை 15 லட்சத்து 87 ஆயிரத்து 640 கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 13 லட்சத்து 47 ஆயிரத்து 36 பரிசோதனைகளுக்கு ‘நெகட்டிவ்’ என்று முடிவு வந்துள்ளது.
மேலும், சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், பொதுமக்கள் என மொத்தம் 7 லட்சத்து 66 ஆயிரத்து 555 பேருக்கு (2-வது டோஸ் உட்பட) தடுப்பூசி போடப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.