தமிழகம்

புதுச்சேரியில் 79 பேருக்கு கரோனா தொற்று: மேலும் ஒருவர் உயிரிழப்பு

அ.முன்னடியான்

புதுச்சேரியில் புதிதாக 79 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை செயலர் அருண் இன்று(ஆக. 15) வெளியிட்ட தகவலில், ‘‘புதுச்சேரி மாநிலத்தில் 5,022 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரி – 41, காரைக்கால் - 17, ஏனாம் – 1, மாஹே - 20 பேர் என மொத்தம் 79 (1.57 சதவீதம்) பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், புதுச்சேரி ரெயின்போ நகரைச் சேர்ந்த 60 வயது முதியவர் ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,805 ஆகவும், இறப்பு விகிதம் 1.48 சதவீதமாகவும் உள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 1 லட்சத்து 22 ஆயிரத்து 282 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது மருத்துவமனைகளில் 201 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 728 பேரும் என மொத்தமாக மாநிலம் முழுவதும் 929 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

புதிதாக 85 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 19 ஆயிரத்து 548 (97.76 சதவீதம்) ஆக உள்ளது. இதுவரை 15 லட்சத்து 79 ஆயிரத்து 476 கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. இதில் 13 லட்சத்து 40 ஆயிரத்து 133 பரிசோதனைகள் ‘நெகடிவ்’ என்று முடிவு வந்துள்ளது.

மேலும், சுகாதார பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், பொதுமக்கள் என மொத்தம் 7 லட்சத்து 63 ஆயிரத்து 158 பேருக்கு (2வது டோஸ் உட்பட) தடுப்பூசி போடப்பட்டுள்ளது' இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT