தமிழகம்

தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் அறிவிப்புகளை வெளியிட வேண்டும்: ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியது:

தமிழகத்தின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டிருப்பது வரவேற்கத்தக்கது.

அதேநேரத்தில், உரிய முறையில் தமிழகத்தின் நிதிநிலையை மேம்படுத்தி, குறைந்தபட்ச தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில், வரவிருக்கும் சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிப்புகளை வெளியிட வேண்டும்.

மேலும், கரோனா பரவல் காலத்தில் வாழ்வாதாரத்தை இழந்துள்ளதமிழக மக்கள், தங்களின் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் இருந்து அரசுப் பள்ளிகளுக்கு மாற்றம் செய்துவரும் நிலையில், பள்ளிகளுக்கு புதிய கட்டிடங்களைக் கட்டி, ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்பி, கல்வித் தரத்தை மேம்படுத்த அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

அப்போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி, செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT