விழுப்புரம் தலைமை குற்றவியல் நடுவர் மன்றம். 
தமிழகம்

பாலியல் வழக்கு: விழுப்புரம் தலைமை குற்றவியல் நடுவர் மன்றத்தில் சிறப்பு டிஜிபி ஆஜர்

எஸ்.நீலவண்ணன்

பெண் ஐபிஎஸ் அதிகாரிக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், விழுப்புரம் தலைமைக் குற்றவியல் நடுவர் மன்றத்தில் பணியிடைநீக்கம் செய்யப்பட்ட சிறப்பு டிஜிபி இன்று ஆஜரானார்.

எஸ்.பி.யாக உள்ள பெண் ஐபிஎஸ் அதிகாரி ஒருவர், கடந்த ஏப்ரல் மாதம் அப்போதைய முதல்வரின் பாதுகாப்புப் பணியில் இருந்தார். அவரது மேலதிகாரியான சிறப்பு டிஜிபி அவரது மாவட்டத்துக்கு வந்தபோது, மரியாதை நிமித்தமாக அவரைச் சந்தித்துள்ளார். அப்போது, அந்த பெண் எஸ்.பி.யை காரில் ஏறச்சொன்ன சிறப்பு டிஜிபி, பாலியல் தொந்தரவில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இவ்விவகாரம் குறித்து அந்தப் பெண் ஐபிஎஸ் அதிகாரி அப்போதைய தமிழக டிஜிபி மற்றும் உள்துறைச் செயலாளரிடம் புகார் அளித்தார். இதுகுறித்து, விசாரணை நடத்த கூடுதல் தலைமைச் செயலாளர் அந்தஸ்தில் உள்ள பெண் அலுவலர் தலைமையில் விசாரணை கமிட்டி அமைக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, சிறப்பு டிஜிபி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அவர் மீது சிபிசிஐடி போலீஸார் 6 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டனர்.

இதற்கிடையே, கடந்த ஏப்ரல் 23-ம் தேதி விழுப்புரம் குற்றவியல் நடுவர் மன்றம் எண் 2-ல், நடுவர் முன்பு அந்தப் பெண் ஐபிஎஸ் அதிகாரி ஆஜராகி, வாக்குமூலம் அளித்தார்.

இந்நிலையில், சிபிசிஐடி ஏடிஎஸ்பி கோமதி தலைமையிலான போலீஸார் கடந்த ஜூலை 29-ம் தேதி விழுப்புரம் தலைமைக் குற்றவியல் நடுவர் மன்றத்தில் சுமார் 400 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தனர்.

இந்நிலையில், இவ்வழக்கு இன்று (ஆக. 09) விழுப்புரம் தலைமை குற்றவியல் நடுவர் மன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. இதையடுத்து, சிறப்பு டிஜிபி நேரில் ஆஜராக வேண்டுமென்று நடுவர் மன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து, இன்று விழுப்புரம் தலைமை குற்றவியல் நடுவர் மன்றத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சிறப்பு டிஜிபி ஆஜரானார். இவ்வழக்கில் தொடர்புடைய செங்கல்பட்டு எஸ்.பி. கண்ணனும் ஆஜரானார்.

SCROLL FOR NEXT