வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் நடைபெற்ற விழாவில் பெண்ணுக்கு பழங்குடியினச் சான்றிதழை வழங்குகிறார் அமைச்சர் சா.மு.நாசர். உடன் ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ். 
தமிழகம்

பழங்குடியினருக்கு இலவச மனைப் பட்டாக்கள்: பால்வளத் துறை அமைச்சர் நாசர் வழங்கினார்

செய்திப்பிரிவு

திருத்தணியில் பழங்குடியினர் சான்றுகள், இலவச வீட்டுமனை பட்டாக்கள் மற்றும் முதியோர் ஓய்வூதியத்துக்கான ஆணைகளை பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் நேற்று வழங்கினார்.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி வட்டத்தில், வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில், பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் பழங்குடியினர் சான்றுகள், இலவச வீட்டுமனை பட்டாக்கள் மற்றும் முதியோர் ஓய்வூதியத்துக்கான ஆணைகளை வழங்கினார்.

விழாவில், அமைச்சர் நாசர் பேசும்போது, ஆதிவாசிகள் தினத்தை ஒட்டி திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி வட்டத்துக்கு உட்பட்ட பாப்பிரெட்டிபள்ளி, காஞ்சிபாடி, ராஜபத்மாபுரம், பெரிய களகாட்டூர் கிராமங்களைச் சேர்ந்த 104 பழங்குடியின மக்களுக்கு இனச் சான்றுகளும், வி.கே.என்.கண்டிகை, சூரிய நகரம் கிராமங்களை சேர்ந்த 20 பழங்குடியின மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களும், தும்பிகுளம் மற்றும் சகவராஜபேட்டை கிராமங்களை சேர்ந்த 7 பழங்குடியின மக்களுக்கு முதியோர் ஓய்வூதியத்துக்கான ஆணைகளும் வழங்கப்பட்டுள்ளன.

இனச்சான்றுகள் அடிப்படையிலேயே பழங்குடியினர்களுக்கான கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார சலுகைகளில் முன்னுரிமை வழங்கப்பட்டு வருவதால் இதை முழுமையாக பயன்படுத்தி வாழ்வில் முன்னேற்றம் பெற வேண்டும் என்றார்.

விழாவில், மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், திருத்தணி எம்எல்ஏ ச.சந்திரன், திருவள்ளூர் எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன், திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் எம்.சத்யா, திருத்தணி வட்டாட்சியர் ஜெயராணி மற்றும் அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT