தமிழகத்தின் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் இன்று (ஆக. 08) வெளியிட்ட அறிவிப்பு:
"வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக, தமிழகத்தில் இன்று நீலகிரி, கோவை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, புதுக்கோட்டை மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், ஏனைய மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை அளவு (சென்டி மீட்டரில்):
தஞ்சாவூர் 8, பவானி (ஈரோடு), வாலாஜா (ராணிப்பேட்டை) 6, நடுவட்டம் (நீலகிரி), குமாரபாளையம் (நாமக்கல்), வேப்பந்தட்டை (பெரம்பலூர்) தலா 5, வேலூர், சின்னக்கல்லாறு (கோவை), ஆண்டிமடம் (அரியலூர்) தலா 4, சங்கரிதுர்க் (சேலம்), அரிமளம் (புதுக்கோட்டை), மயிலாடுதுறை, தாத்ஐயங்கார்பேட்டை (திருச்சி), வானமாதேவி (கடலூர்) தலா 3, கிருஷ்ணகிரி, குளித்தலை (கரூர்), நாகப்பட்டினம், பாப்பிரெட்டிப்பட்டி (தருமபுரி) தலா 2, திருத்தணி (திருவள்ளூர்), காரைக்கால், பெரியாறு (தேனி), கமுதி (ராமநாதபுரம்), வடபுதுப்பட்டு (திருப்பத்தூர்), திருச்சுழி (விருதுநகர்), மானாமதுரை (சிவகங்கை), ஸ்ரீபெரும்புதூர் (காஞ்சிபுரம்), வந்தவாசி (திருவண்ணாமலை) 1.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
வங்கக் கடல் பகுதிகள்
08.08.2021 - 09.08.2021 வரை: மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.
08.08.2021 முதல் 10.08.2021 வரை: தென்கிழக்கு இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.
மீனவர்கள் இப்பகுதிகளுக்கு எச்சரிக்கையுடன் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
அரபிக் கடல் பகுதிகள்
08.08.2021 முதல் 12.08.2021 வரை: தென்மேற்கு, வடக்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 50-69 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 70 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.
மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்''.
இவ்வாறு புவியரசன் தெரிவித்துள்ளார்.