தமிழகம்

தாம்பரம் ரயில் நிலையத்தில் தவறான ஒலிபெருக்கி அறிவிப்பால் பயணிகள் அவதி

செய்திப்பிரிவு

தாம்பரம் ரயில் நிலையத்தில், சென்னை – திருச்சி சோழன் விரைவு ரயில் (எண் 06795) வருகை தொடர்பாக தவறான ஒலிபெருக்கி அறிவிப்பால், முதியோர், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட பயணிகள் மிகுந்தசிரமத்துக்கு உள்ளாகினர். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை எக்மோர் ரயில் நிலையத்தில் இருந்துநேற்று காலை 8 மணியளவில் சென்னை-திருச்சிசோழன் விரைவு ரயில் (எண்.06795) புறப்பட்டது. இதற்காக தாம்பரம் ரயில் நிலைய 7-வது நடைமேடையில் ஏராளமான பயணிகள் காத்திருந்தனர். அப்போது, நடைமேடையில் உள்ள தானியங்கி ஒலிபெருக்கியில் சென்னை-திருச்சி சோழன் விரைவு ரயிலின் டி-1 பெட்டி 16-வது பெட்டியாக வரும் என்று அறிவிக்கப்பட்டது.

இதனால் டி-1 பெட்டியில் ஏறக் காத்திருந்த பயணிகள் அனைவரும் 16-வது பெட்டி வந்து நிற்கும் இடத்தில் சென்று காத்துக்கொண்டிருந்தனர். சுமார் 8:35 மணி அளவில் தாம்பரம் ரயில் நிலையத்தின் 7-வது நடைமேடைக்கு வந்த ரயிலில், டி-1 பெட்டி ரயில் இன்ஜின் பகுதியிலிருந்து 4-வது பெட்டியாக இணைக்கப்பட்டு இருந்தது. இதனால் 16-வது பெட்டி நிற்கும் இடத்தில் காத்திருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

தாம்பரம் ரயில் நிலையத்தில் சுமார் இரண்டு நிமிடத்துக்கு மட்டுமே ரயில் நிற்கும் என்பதால், பயணிகள் அவசரம் அவசரமாக 16-வது பெட்டி இருக்கும் இடத்திலிருந்து, 4-வது பெட்டி இருக்கும் இடத்துக்கு ஓடிச்சென்றனர். தவறான அறிவிப்பால் முதியோர், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பயணிகள் கடும் சிரமத்துக்குஉள்ளாகினர். எனவே, இதுதொடர்பாக சம்பந்தப்பட்டஅதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்என்று ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SCROLL FOR NEXT