மீரா மிதுன்: கோப்புப்படம் 
தமிழகம்

பட்டியலின மக்களை இழிவுபடுத்தி பேச்சு: நடிகை மீரா மிதுனைக் கைது செய்யக் கோரி புகார்

சுப.ஜனநாயக செல்வம்

பட்டியலின மக்களை இழிவுபடுத்திப் பேசிய நடிகை மீரா மிதுனைக் கைது செய்யக்கோரி, மதுரை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் இன்று திராவிடர் விடுதலைக் கழகத்தினர் புகார் மனு அளித்தனர்.

மதுரை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில், மாவட்டச் செயலாளர் மணி அமுதன் தலைமையில் அக்கட்சியினர் இன்று (ஆக. 07) மதுரை மாநகரக் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

திராவிடர் விடுதலைக் கழகத்தினர் புகார் மனு அளித்தனர்.
படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி.

அம்மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது:

"நடிகை மீரா மிதுன் சமீபத்தில் வெளியிட்ட காணொலியில் பட்டியலினத்தைச் சேர்ந்த சினிமா இயக்குநர்களையும், பட்டியல் சாதியினரையும் குற்றவாளிகள், திருடர்கள் எனக் கொச்சைப்படுத்தியுள்ளார். இந்தியா முழுவதும் வசிக்கக்கூடிய கோடிக்கணக்கான பட்டியலின மக்களையும் இழிவுபடுத்தும் விதமாகவும், சமூகப் பதற்றத்தை உருவாக்கும் விதமாகவும் பேசியுள்ளார்.

நடிகை மீரா மிதுன், அவரது நண்பர் ஷாம் அபிஷேக் இருவர் மீதும் தீண்டாமை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம், சமூக வலைதளங்களில் இதுபோல் சாதிய வன்மப் பேச்சுகள் நிகழாதவாறு தடுக்க வேண்டும்".

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT