புதுச்சேரியில் 102 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் மொத்த இறப்பு எண்ணிக்கை 1800 ஆக அதிகரித்துள்ளது.
இதுகுறித்துப் புதுச்சேரி சுகாதாரத்துறைச் செயலர் அருண் இன்று (ஆக.7) வெளியிட்ட தகவலில், ‘‘புதுச்சேரி மாநிலத்தில் 5,521 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரி-69, காரைக்கால்-9, மாஹே-24 என 102 (1.85 சதவீதம்) பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏனாமில் புதிதாக யாருக்கும் தொற்று ஏற்படவில்லை.
இதனால் புதுச்சேரி மாநிலத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 21 ஆயிரத்து 523 ஆக அதிகரித்துள்ளது. தற்போது மருத்துவமனைகளில் 176 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 706 பேரும் என மொத்தமாக 882 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மேலும், புதுச்சேரி மூலகுளம் பகுதியைச் சேர்ந்த 35 வயது இளைஞர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனால் இறப்பு எண்ணிக்கை 1,800 ஆக அதிகரித்துள்ளது. இறப்பு விகிதம் 1.48 சதவீதமாக உள்ளது. புதிதாக 91 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 18 ஆயிரத்து 841 (97.79 சதவீதம்) ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை 15 லட்சத்து 36 ஆயிரத்து 933 கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 13 லட்சத்து 14 ஆயிரத்து 179 பரிசோதனைகளுக்கு ‘நெகட்டிவ்’ என்று முடிவு வந்துள்ளது. மேலும், சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், பொதுமக்கள் என மொத்தம் 7 லட்சத்து 31 ஆயிரத்து 370 பேருக்கு (2-வது டோஸ் உட்பட) தடுப்பூசி போடப்பட்டுள்ளது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.