புதுச்சேரியில் 81 பேருக்கு கரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் உயிரிழப்பு ஏற்படவில்லை.
இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறைச் செயலர் அருண் இன்று (ஆக.5) வெளியிட்ட தகவலில், ‘‘புதுச்சேரி மாநிலத்தில் 5,953 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரி-62, காரைக்கால்-6, ஏனாம் 1, மாஹே-12 என 81 (1.36 சதவீதம்) பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் புதுச்சேரி மாநிலத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 21 ஆயிரத்து 333 ஆக அதிகரித்துள்ளது. தற்போது மருத்துவமனைகளில் 167 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 721 பேரும் என மொத்தமாக 888 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மேலும் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. இதனால் இறப்பு எண்ணிக்கை 1,798 ஆகவும், இறப்பு விகிதம் 1.48 சதவீதமாகவும் உள்ளது. புதிதாக 100 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 18 ஆயிரத்து 647 (97.79 சதவீதம்) ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை 15 லட்சத்து 25 ஆயிரத்து 144 கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 13 லட்சத்து 4 ஆயிரத்து 49 பரிசோதனைகளுக்கு ‘நெகட்டிவ்’ என்று முடிவு வந்துள்ளது. மேலும், சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், பொதுமக்கள் என மொத்தம் 7 லட்சத்து 22 ஆயிரத்து 992 பேருக்கு (2-வது டோஸ் உட்பட) தடுப்பூசி போடப்பட்டுள்ளது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.