தமிழகம்

‘ஊழலை வளர்த்துவிட்ட கட்சிகள்’ : பாரிவேந்தர் குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

தமிழகத்தில் இரண்டு பெரிய கட்சிகள் ஊழலை வளர்த்து விட்டதாக இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் பாரிவேந்தர் குற்றஞ்சாட்டினார்.

இந்திய ஜனநாயக கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம் மதுரையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் பாரிவேந்தர் பேசியதாவது:

தமிழகத்தில் 2 பெரிய கட்சிகளும் ஊழலை வளர்த்துவிட்டுள்ளன. தமிழ்நாட்டில் பெரும்பாலானோர் சிந்திக்க முடியாத நிலையில் சுயநினைவின்றி உள்ளனர். ஆயிரக்கணக்கான மதுக்கடைகளை திறந்து விட்டதன் மூலம் ஆண்ட கட்சியும், ஆளும் கட்சியும் தமிழக மக்களை சிந்திக்க விடாமல் செய்துவிட்டன. மக்களின் சிந்தனையைத் தடுக்க பல சலுகைகளை அரசியல்வாதிகள் அறிவித்து வருகின்றனர்.

பள்ளி, கல்லூரி மாணவர்கள் உட்பட அனைவருக்கும் மது மிக மலிவாக கிடைக்கிறது. மதுக்கடைகளை மூடிவிட்டால் போதும். தமிழக மக்கள் விழித்துக் கொண்டு சிந்திக்க ஆரம்பித்து விடுவர். அதன்பிறகு ஒரு மணி நேரம்கூட ஆட்சி நடத்த முடியாது.

அதிகளவில் ஊழல் செய்யும் கட்சிகள் பெரிய கட்சியாகவும், குறைவாக ஊழல் செய்யும் கட்சிகள் சிறிய கட்சியாகவும் உள்ளன. இலவசம் என்பது நமது ரத்தத்தை நாமே குடிப்பதற்கு சமம். இலவசங்களை கண்டு மக்கள் ஏமாந்துவிடக் கூடாது என்றார்.

          
SCROLL FOR NEXT