புதுச்சேரியில் 120 பேருக்கு கரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளனர். தொற்று பாதித்த 4 குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறைச் செயலர் அருண் இன்று (ஆக.4) வெளியிட்ட தகவலில், ‘‘புதுச்சேரி மாநிலத்தில் 5,868 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரி-85, காரைக்கால்-15, ஏனாம் 2, மாஹே-18 என 120 (2.04 சதவீதம்) பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் புதுச்சேரி மாநிலத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 21 ஆயிரத்து 252 ஆக அதிகரித்துள்ளது. தற்போது மருத்துவமனைகளில் 162 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 745 பேரும் என மொத்தமாக 907 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மேலும் புதுச்சேரி ரெயின்போ நகரைச் சேர்ந்த 72 வயது மூதாட்டி, கரிக்கலாம்பாக்கம் 62 வயது மூதாட்டி என 2 பேரும், காரைக்காலில் 30 வயதுப் பெண் ஒருவரும் என மொத்தம் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் இறப்பு எண்ணிக்கை 1,798 ஆக அதிகரித்துள்ளது. இறப்பு விகிதம் 1.48 சதவீதமாக உள்ளது. புதிதாக 95 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 18 ஆயிரத்து 547 (97.77 சதவீதம்) ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை 15 லட்சத்து 19 ஆயிரத்து 276 கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 12 லட்சத்து 99 ஆயிரத்து 72 பரிசோதனைகளுக்கு ‘நெகட்டிவ்’ என்று முடிவு வந்துள்ளது. மேலும், சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், பொதுமக்கள் என மொத்தம் 7 லட்சத்து 18 ஆயிரத்து 362 பேருக்கு (2-வது டோஸ் உட்பட) தடுப்பூசி போடப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
4 குழந்தைகளுக்கு கரோனா:
கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் உள்ள குழந்தைகளுக்கான கரோனா வார்டில் 6 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 5 வயதுக்கு உட்பட்ட 2 குழந்தைகள், 5 வயதுக்கு மேற்பட்ட 2 குழந்தைகள் என 4 குழந்தைகள் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், தொற்று உறுதி செய்யப்பட்ட தாயுடன் 2 குழந்தைகளும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.