ஆதார் விவரங்களை தனிநபர்களுக்கு வழங்கக்கூடாது. புலன் விசாரணை அமைப்புகளுக்கு வழங்கலாம் என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
புதுக்கோட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர் கணேசன், 2019-ல் காணாமல்போன தனது மகன் சண்முகபிரியனை கண்டுபிடித்து ஒப்படைக்கக்கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதிகள் பாரதிதாசன், நிஷாபானு அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
சிபிசிஐடி போலீஸ் சார்பில், மனுதாரரின் மகனின் ஆதார் விவரங்கள் கிடைக்கவில்லை. இதனால் சிறுவனை கண்டுபிடிப்பதில் தாமதம் ஏற்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டது.
மத்திய அரசுத் தரப்பில், ஆதார் விவரங்கள் தனிநபர் சம்பந்தப்பட்டவை. நீதிமன்றம் உத்தரவிட்டால் ஆதார் விவரங்களை வழங்கத் தயாராக உள்ளோம் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், ஆதார் விவரங்களை தனிநபர்களுக்கு தான் வழங்கக்கூடாது. வழக்கு விசாரணைகளுக்கு உதவும் வகையில் புலன் விசாரணை அமைப்புகளுக்கு ஆதார் விவரங்களை வழங்கலாம் என்றனர்.
பின்னர், மனு தொடர்பாக ஆதார் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஆகஸ்ட் 6-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.