சர்ச்சைக்குள்ளான அமைச்சர் ராஜகண்ணப்பன், திருமாவளவன் சந்திப்பு புகைப்படம். 
தமிழகம்

அமைச்சர் ராஜகண்ணப்பன் - திருமாவளவன் சந்திப்பு: சமூக வலைதளங்களில் வைரலான புகைப்படத்தால் சர்ச்சை

செய்திப்பிரிவு

போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பனை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் சந்தித்த படம், சமூக வலைதளங்களில் வைரலாக பரவி, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பனின் பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்து தெரிவிப்பதற்காக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் கடந்த 31-ம் தேதி அவரின் வீட்டுக்கு சென்றார். அப்போது இருவரும் அருகே அமர்ந்து பேசும் படம் ஒன்று வெளியானது. அந்த படத்தில் சோபா நாற்காலியில் அமைச்சர் ராஜகண்ணப்பனும் சாதாரண பிளாஸ்டிக் நாற்காலியில் திருமாவளவனும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர்.

இந்த படம் சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தை சமூக வலைதளங்களில் பலரும் பகிர்ந்து கடுமையாக விமர்சித்துள்ளனர். அருகில் அவ்வளவு பெரிய சோபா இருந்தாலும், பழைய பிளாஸ்டிக் நாற்காலியில் திருமாவளவனை அமர வைத்திருப்பது ஏன், சமூக நீதியை முன்வைத்து அரசியல் செய்யும் திராவிட கட்சியிலேயே சாதி பிரிவினை இருக்கத்தான் செய்கிறது. ஒரு நாடாளுமன்ற உறுப்பினரை, அதுவும் கூட்டணி கட்சியின் தலைவருக்கு இந்த நிலைமையா, இதுதான் திமுக கடைபிடிக்கும் சமத்துவமா, ‘இப்படியொரு நாற்காலியில் அமரச்சொன்னால், முடியாது என திரும்பிவராமல் அவரும் கைகட்டி அமர்ந்திருக்கிறார்’ என பல்வேறு கருத்துகளை தெரிவித்து விமர்சித்திருந்தனர்.

இது தொடர்பாக திருமாவளவன் கூறியிருப்பதாவது:

அமைச்சர் ராஜகண்ணப்பன் அருகில் இருக்கும் சோபாவில் அமருங்கள் என 3 முறை கூறினார். அந்த நாற்காலி சற்று இடைவெளியிலும், இடையில் சிலையும் இருக்கிறது. எனவே,இது எனக்கு வசதியாக இருக்கிறது எனக் கூறி, அங்கிருந்த மற்றொரு இருக்கையை நானேதான் இழுத்துப்போட்டு உட்கார்ந்தேன். நான் பணிந்துபோய் உட்கார வேண்டிய அவசியமே கிடையாதே.

குதர்க்கவாதிகள், காழ்ப்புணர்ச்சி கொண்டவர்கள், விடுதலைச் சிறுத்தைகள் வளர்ச்சியை பொறுத்துக்கொள்ள முடியாதவர்கள் ஏதாவது சேறு பூச வேண்டும் என நினைக்கிறார்கள். இதை ஒருபோதும் பொருட்படுத்த மாட்டேன். என் நலனில் அக்கறை கொண்டவர்கள் விமர்சித்தால் அதற்கு பதில் சொல்வேன்.

மேலும், கைகட்டி உட்காருவது என்னுடைய பழக்கம். என் அம்மா முன்பும், கட்சித் தொண்டர்கள் முன்பும் கை கட்டி கொண்டு இருப்பேன். இதையெல்லாம் அரசியல் ஆக்குவது என்பது அவர்களின் இயலாமையை காட்டுகிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT