தமிழகம்

பெரியபாளையம் பவானி அம்மன் கோயில் நில ஆக்கிரமிப்பை அகற்ற இந்து சமய அறநிலையத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

செய்திப்பிரிவு

பெரியபாளையம் பவானி அம்மன் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற, இந்து சமய அறநிலையத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பெரியபாளையம் பவானி அம்மன் கோயிலுக்குச் செல்வதற்கான பாதையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள கடைகளை அப்புறப்படுத்தக் கோரி, கோயில் பரம்பரை அறங்காவலர் லோகமித்ரா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.மகாதேவன், கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகள் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கேள்வி எழுப்பி, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர், உத்துக்கோட்டை தாசில்தார் ஆகியோர் உதவியுடன், ஆக்கிரமிப்புகளை இரு வாரங்களில் அகற்ற வேண்டும் என இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

பின்னர், வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 12ம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி, ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டார்.

SCROLL FOR NEXT