ஆடித் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் உட்பட அனைத்து கோயில்களிலும் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் 3-ம் தேதி வரை மூன்று நாட்களுக்கு சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி இல்லை என ஆட்சியர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், “கரோனா ஊடரங்கில் தளர்வு அளிக்கப்பட்டதால், தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும், சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில், ஆடி கிருத்திகை மற்றும் ஆடி பெருவிழாவை முன்னிட்டு முருகன் கோயில்கள் உட்பட அனைத்து கோயில்களிலும் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அதிகளவில் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், தொற்று பரவல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
இதனால், திருவண்ணாமலை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோயில்களான திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில், படைவீடு ரேணுகாம்பாள் கோயில் மற்றும் முருகன் கோயில்கள் உட்பட அனைத்து கோயில்களிலும், ஆடி கிருத்திகை திருவிழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் 3-ம் தேதி வரை என மூன்று நாட்களுக்கு சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி கிடையாது.
ஆகமவிதிப்படி அர்ச்சகர்கள் மற்றும் கோயில் ஊழியர்கள் மூலமாக அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் வழக்கம்போல் நடைபெறும்” என தெரிவித்துள்ளார்.