புதுச்சேரியில் புதிதாக 100 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர். கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்தை தாண்டியுள்ளது.
இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை செயலர் அருண் இன்று (ஜூலை 31) வெளியிட்ட தகவலில், ‘‘புதுச்சேரி மாநிலத்தில் 5,082 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரியில் 67 பேருக்கும், காரைக்காலில் 20 பேருக்கம், ஏனாமில் ஒருவருக்கும், மாஹேவில் 12 பேருக்கும் என 100 (1.97 சதவீதம்) பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் புதுச்சேரி மாநிலத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 20 ஆயிரத்து 915 ஆக அதிகரித்துள்ளது. தற்போது மருத்துவமனைகளில் 166 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 796 பேரும் என மொத்தமாக 962 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மேலும் காரைக்காலைச் சேர்ந்த 2 முதியவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால் இறப்பு எண்ணிக்கை 1,795 ஆக உயர்ந்துள்ளது. இறப்பு விகிதம் 1.48 சதவீதமாக உள்ளது. புதிதாக 115 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 18 ஆயிரத்து 158 (97.72 சதவீதம்) ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை 14 லட்சத்து 99 ஆயிரத்து 224 கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. இதில் 12 லட்சத்து 81 ஆயிரத்து 605 பரிசோதனைகள் ‘நெகடிவ்’ என்று முடிவு வந்துள்ளது. மேலும், சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், பொதுமக்கள் என மொத்தம் 7 லட்சத்து 2 ஆயிரத்து 354 பேருக்கு (2வது டோஸ் உட்பட) தடுப்பூசி போடப்பட்டுள்ளது" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
2 குழந்தைகளுக்கு தொற்று:
கதிர்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் உள்ள குழந்தைகளுக்கான கரோனா வார்டில் 3 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளன. 5 வயதுக்கு மேற்பட்ட 2 குழந்தைகள் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றன. மேலும், தொற்று உறுதி செய்யப்பட்ட தாயுடன் 1 குழந்தை அனுமதிக்கப்பட்டுள்ளது.