உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நேரடி விசாரணை தொடங்கக் கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் உக்கிரபாண்டி, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:
''கரோனா தொற்றுப் பரவலால் கடந்த ஆண்டு மார்ச் கடைசி வாரத்தில் இருந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஊரடங்கு காரணமாக உயர் நீதிமன்றங்களில் நேரடி விசாரணை நிறுத்தப்பட்டது. தற்போது காணொலி வழியாகவே விசாரணை நடைபெற்று வருகிறது.
இதனால் வழக்கறிஞர்கள், மனுதாரர்கள் நீதிமன்றத்துக்குள் அனுமதிக்கப்படுவதில்லை. வழக்கறிஞர்கள் அறைகளும் திறக்கப்படுவதில்லை. வழக்கு ஆவணங்களைப் பெற முடியாமல் வழக்கறிஞர்கள் தவிக்கின்றனர். ஆன்லைன் விசாரணையால் இளம் வழக்கறிஞர்கள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.
உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள தேநீர்க் கடைகள் மற்றும் பிற கடைகள் அருகே நின்று மனுக்களையும், ஆவணங்களையும் வழக்கறிஞர்கள் பெறுகின்றனர். எனவே, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நேரடி விசாரணையைத் தொடங்க உத்தரவிட வேண்டும்''.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவைத் தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி மற்றும் நீதிபதி எஸ்.ஆனந்தி அமர்வு விசாரித்தது. பின்னர், ''தற்போதைய நிலையில் மனுதாரர் கோரிக்கை தொடர்பாக எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. எனவே மனு தள்ளுபடி செய்யப்படுகிறது'' எனத் தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.